அடுத்த மாதம் திருமணம்.. கரூர் கூட்டத்தில் உயிரிழந்த இளம் ஜோடி.. கதறும் உறவினர்கள்
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. கரூர் மாவட்டம் முழுவதுமே மரண ஓலங்களால் கலங்கடிக்க செய்துள்ளது. இந்த சம்பவத்தில் 10 குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் அடுத்த மாதம் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த இளம் ஜோடி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவர்களின் உறவினர்களை மிகுந்த வேதனையில் தள்ளியுள்ளது.
கரூர் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 39 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் என்று பலதரப்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் சம்பவத்தை நினைத்த மொத்த நாடும் கண்ணீரில் மூழ்கியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு, குழந்தைகளை இழந்த உறவுகள், உறவுகளை இழந்த குழந்தைகள் என்று திரும்பிய பக்கமெல்லாம் சோக சம்பவங்களால் நிறைந்துள்ளது.

இந்நிலையில் அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த இளம் ஜோடி தவெக கூட்டத்தில் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த இளம் பெண்ணின் அம்மா, "என் மகள் கோகுலஶ்ரீ. மருமகன் ஆகாஷ். இருவருக்கும் 24 வயது தான் ஆகிறது. அடுத்த மாதம் அவர்களுக்கு திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. நேற்று மதியம் 2 மணியளவில் என்னிடம் பேசிவிட்டு தான் அவர்கள் சென்றார்கள். கரூர் என்பதால் தான் விட்டேன். இல்லையென்றால் விட்டிருக்க மாட்டேன். தெரிந்தவர்களின் வீட்டு மாடியில் நிற்கிறோம் என்றனர். கீழே இறங்கி வரும்போது தான் ஆகியுள்ளது.
அவர்களை மிதித்தே கொன்றுவிட்டனர். 6.30 மணிக்கு பேசியபோது கும்பலாக இருக்கிறது, வந்துவிடுங்கள் என்று கூறினேன். நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். வந்துவிடுவோம் என்றனர். செல்ஃபி எல்லாம் எடுத்து போட்டனர். என் மகனும் அவர்களுடன் சென்றிருந்தனர். மகன் தப்பித்துவிட்டான். மகள், மருமகன் இருவரும் உயிரிழந்துவிட்டனர். ஆசை ஆசையா பார்த்து பார்த்து வளர்த்து இப்படி ஆகிவிட்டதே.
கொன்றுவிட்டார்கள். கடைசியாக தவெக கட்சி துண்டுடன் அவர்கள் போட்டோ எடுத்து அனுப்பியிருந்தனர். இருவரும் பொண்ணு, மாப்பிள்ளை போல சென்று இப்படி கருமாதி ஆகிவிட்டதே. என் மகளை பொத்தி பொத்தி வளர்த்தேன். கல்லூரியில் பேராசிரியராக இருந்தவள் இப்படி இறந்துவிட்டாளே. என் மகள் சிங்கம் போல இருப்பாள். கடைசி 3 நாட்களாக தூங்காமல் போறேன்.. போறேன் என்று சொல்லி இப்படி போய்விட்டாளே.
வண்டி ஏறும்போது கூட போக வேண்டாம் என்று நான் கெஞ்சினேன். நாங்கள் மாடியில் தான் நிற்போம், சாலையில் நிற்க மாட்டோம் என்று சொல்லியதை நம்பி ஏமாந்து அனுப்பிவிட்டேன். ஆசை ஆசையாய் பார்த்து பார்த்து எல்லாம் செய்து, கடைசியில் வாழாமலேயே சென்றுவிட்டார்களே. எங்கள் குடும்பம் வீதியில் நிற்கிறது. சாவதற்காக தான் அங்கு போனார்களா. கடவுளுக்கு கூட கண் தெரியவில்லையா." என்றார்.












Click it and Unblock the Notifications