கிருஷ்ணகிரி கோயில்களில் 199 கோடி மதிப்பிலான கற்கள் திருட்டு.. சேலம் டிஜஜி நேரில் ஆஜராக உத்தரவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கோவில்களில் 199 கோடி ரூபாய் மதிப்பிலான கற்கள் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக சேலம் சரக டிஜஜி வரும் ஜூலை 26-ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனுமந்தையா சுவாமி கோவில், பட்டாலம்மன் கோவில்,பெரியமலை பெருமாள் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், கோதண்டராமசாமி கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.

இந்த சொத்துக்களை சிலர் அரசு அதிகாரிகளுடன் இணைந்து சட்டவிரோதமாக குவாரிகள் நடத்தி கோவில் நிலத்தில் இருந்த கற்களை விற்று வருவதாக சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018 ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில் கோவில் நிலங்களின் ஆவணங்களை திருத்தி சட்டவிரோத குவாரிகள் நடத்தி 200கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டியிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து கோவில் நிலங்களில் சட்ட விரோதமாக நடத்தப்பட்டு வரும் குவாரிகளை அப்புறப்படுத்தவும், கோவில் நில ஆவணங்களை திருத்த உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என ராதாகிருஷ்ணன் நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்து அறநிலைய துறையின் துணை ஆணையர், கோவில் நிலம் மீட்பு தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் தேன்கனிக்கோட்டை ஹனுமந்தைய கோவிலில் 28 கோடி 51 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கற்களும், கிருஷ்ணகிரியில் உள்ள பட்டாலம்மன் கோவிலில் 170 கோடியே 14 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பிலான கற்களும் திருடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் சில அதிகாரமிக்க நபர்கள் இந்த கோவில்களுக்குள் செல்ல அறநிலைய துறை அதிகாரிகளை விடுவதில்லை என்றும் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை பதிவு செய்த நீதிபதி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் கோவில் நிலங்களில் சட்டவிரோத குவாரிகள் நடத்துபவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள், நிலுவை வழக்குகள் குறித்த வழக்குகள் அதில் எடுத்த நடவடிக்கை குறித்த விவரங்களை வரும் ஜூலை 26ம் தேதி காலை 10.30 மணிக்கு சேலம் சரக டிஐஜி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கினை ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications