கிருஷ்ணகிரியில் கொடூர சம்பவம்.. சாலையில் நடந்து சென்றவரை கல்லால் தாக்கி செல்போன் பறித்த சிறுவர்கள்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இரவு நேரத்தில் சாலையில் தனியாக நடந்து சென்றவர் மீது கற்களை வீசி தாக்கிய சிறுவர்கள், அவரிடம் இருந்து செல்போன், பணத்தை பறித்து சென்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. கொடூர செயலில் ஈடுபட்ட சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் டேவிட். இவர் நேற்று கிருஷ்ணகிரிக்கு வேலை விஷயமாக வந்துள்ளார். தொடர்ந்து நள்ளிரவில் காஞ்சிபுரம் செல்வதற்காக கிருஷ்ணகிரி பேருந்து நிறுத்தத்திற்கு பழைய பெங்களூர் சாலை வழியாக நடந்து வந்தார். நள்ளிரவு நேரம் என்பதால் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லை. தனியாக நடந்து வந்த அவர் மீது திடீரென எங்கிருந்தோ கல் வந்து விழுந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த டேவிட் திரும்பி பார்த்த போது 3 சிறுவர்கள் அவரை பின் தொடர்ந்து துரத்தி வந்துள்ளனர். மீண்டும் மீண்டும் கல்லால் டேவிட்டை நோக்கி எறிந்தனர். கல்வீசி தாக்கியதில் படுகாயமடைந்த டேவிட் சாலையில் அப்படியே சரிந்துவிழுந்துள்ளார். அப்போது பாக்கெட்டில் இருந்த செல்போனை சிறுவர்கள் எடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
நடுரோட்டில் படுகாயங்களுடன் ஒருவர் கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து டேவிட்டை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கிருஷ்ணகிரி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பதிவாகியிருந்த சிசிடிவி காட்சி போலீசாரை அதிர்ச்சியடைய செய்தது. நள்ளிரவில் டேவிட் என்ற நபர் தனியாக நடந்து வருவதும், அப்போது அவரை 3 சிறுவர்கள் தாக்குகிறார்கள். சாலையில் கிடந்த கற்களை எடுத்து அவர் மீது வீசுகிறார்கள். கற்களை எறிந்ததில் காயமடைந்த அந்த நபர் சாலையில் தொப்பென விழுவதும் பதிவாகியிருந்தது.
மேலும் அப்போதும் விடாத சிறுவர்கள் அவரை தாக்குகிறார்கள். தொடர்ந்து அவரது சட்டைப்பையில் இருந்த செல்போன் மற்றும் பணத்தை எடுத்துவிட்டு அங்கிருந்து செல்வது போன்ற வீடியோ பதிவாகியிருந்தது. சிசிடிவி வீடியோவில் பதிவான காட்சிகளை வைத்து 3 சிறுவர்ளையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சாலையில் தனியாக சென்ற நபரை தாக்கி செல்போன், பணம் பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications