ஓசூர் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட ரகசியம்.. காதலனுடன் சேர ஆசைப்பட்ட பெண்ணுக்கு அதிரடி தண்டனை!
கிருஷ்ணகிரி : திருமணம் தாண்டிய கள்ளக்காதல் பெரும்பாலும் சிக்கலிலேயே முடிகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜஸ்டின் ராஜசேகர் என்பவரை அவரது மனைவி சன்னி என்பவர், காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டினார். இந்த வழக்கில் சன்னி மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருமணம் தாண்டிய உறவுகள் பெரும்பாலும் குற்றங்களில் முடிகிறது. ஒன்று வாழ்க்கையே வேண்டாம் என தவறாக முடிவெடுக்கிறார்கள். இல்லை என்றால் வாழ்க்கை துணையை அழிக்கிறார்கள். இறுதியாக சேர்ந்து வாழ ஆசைப்படும் கள்ளக்காதல் ஜோடி, அந்த ஆசை நிறைவேறாமல் சிறையிலேயே மீதி காலத்தை கழிக்கிறார்கள். ஏனெனில் பெரும்பாலும் இதுபோன்ற குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. அப்படித்தான் ஓசூரில் நடந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயதாகும் ஜஸ்டின் ராஜசேகர் . இவருடைய மனைவி இந்து சன்னி (33). இவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்தம் அக்ரஹாரம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளார்கள். கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி ஜஸ்டின் ராஜசேகர் திடீரென மாயமானார்.
ஆனால் அவரது வீட்டில் ரத்த கரை படிந்திருந்தது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் மத்திகிரி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் இந்து சன்னியிடம் விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் இந்து சன்னி மத்தம் அக்ரஹாரம் கிராம நிர்வாக அலுவலர் கோபு முன்னிலையில் கணவனை கொன்றதாக சரண் அடைந்தார்.
சன்னியிடம் நடத்திய விசாரணையில், கள்ளக்காதலன் லிண்டோ (38) உதவியுடன் தனது கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்து உடலை மத்திகிரி கூட்டு ரோடு அருகில் உள்ள சுடுகாட்டில் புதைத்து விட்டதாக கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஜஸ்டின் ராஜசேகர் உடலை போலீசார் தோண்டி எடுத்தனர். மேலும் இது தொடர்பாக இந்து சன்னி, அவரது கள்ளக்காதலன் லிண்டோ ஆகியோரை போலீசார் கைது செய்தார்கள்.
இந்த வழக்கு ஓசூர் கூடுதல் மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோஷ் நேற்று தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட இந்து சன்னி, அவரது கள்ளக்காதலன் லிண்டோ ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், குற்றத்தை மறைத்ததற்காக 5 ஆண்டு சிறையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சின்னபிள்ளப்பா ஆஜராகி வாதாடினார்.












Click it and Unblock the Notifications