பஸ் ஓட்டுநரை தாக்கிய ராணுவ வீரர்.. ஆதரவாக திரண்ட பொதுமக்களை துப்பாக்கி காட்டி மிரட்டல்! ஓசூரில் பரபர
அரசு பஸ் ஓட்டுநரை ராணுவ வீரர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி: அரசு பஸ் ஓட்டுநரை தேசிய நெடுஞ்சாலையில் ராணுவ வீரர்கள் தாக்கிய நிலையில், இதைத் தட்டிக் கேட்ட மக்களையும் ராணுவத்தினர் துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
எப்போதும் ராணுவ தளவாடங்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லும் போது, பாதுகாப்பு வாகனங்களும் கூடவே செல்லும். பொதுவாக மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை இந்த பாதுகாப்பை வழங்கும்.
ராணுவ தளவாடங்கள் என்பதால் செல்லும் வழியில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதைச் சமாளிக்க மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை பாதுகாப்பிற்கு இருக்கும். ஆனால், கிருஷ்ணகிரியில் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையாலேயே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

ராணுவ வாகனம்
வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணுவ போர் தளவாடங்கள் பெங்களூரை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது. மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை (CISF) துணை ராணுவத்தினர் உதவி ஆய்வாளர் பிரதாப் தலைமையில் ராணுவத் தளவாடங்கள் ஏற்றிச் செல்லப்பட்டது. ராணுவத் தளவாடங்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் முன்பும் பின்பும் பாதுகாப்புக்கு மூன்று வாகனங்கள் சென்றுள்ளன. அந்த வண்டி கிருஷ்ணகிரி அருகே சென்ற போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தாக்குதல்
கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ராணுவத் தளவாடங்களுடன் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஓசூர் அருகே அந்த அரசு பேருந்து ராணுவ வாகனங்களுக்கு வழி விடாமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் துணை ராணுவ வீரர்களுக்கும் ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் துணை ராணுவ வீரர்கள் அரசு பஸ் ஓட்டுநர் தமிழரசுவை தாக்கிவிட்டுச் சென்றதாகச் சொல்லப்படுகிறது.

மக்கள் போராட்டம்
இதில் ஆத்திரமடைந்த அந்த பஸ் ஓட்டுநர் சோநாதப்புரம் பிரிவு மேம்பாலம் அருகே ராணுவ தளவாடங்கள் செல்லும் வாகனத்தை மறித்து பேருந்தை நிறுத்தியுள்ளார். ஓட்டுநரைத் தாக்கியதற்குத் துணை ராணுவத்தினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பேருந்தில் இருந்து பயணிகள் வலியுறுத்தினர். அப்பகுதியில் இருந்த பொதுமக்களும் சேர்ந்ததால்.. அங்குப் பரபரப்பான ஒரு சூழல் ஏற்பட்டது.

துப்பாக்கியைக் காட்டி மிரட்டல்
அப்போது அங்கிருந்த ராணுவ வீரர்கள் சிலர் பொதுமக்களை நோக்கி துப்பாக்கி காட்டியும் மிரட்டியுள்ளனர். பொதுமக்களை உடனடியாக கலைந்து செல்லுமாறு அவர்கள் மிரட்டியுள்ளனர். இருப்பினும், ராணுவ வீரர்கள் மன்னிப்பு கேட்டால் மட்டுமே விடுவோம் என்பதில் மக்கள் உறுதியாக இருந்துள்ளனர். இதனால் சாலையில் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவத் தளவாடங்களை ஏற்றிச் சென்ற வாகனம் மறிக்கப்பட்டது குறித்த தகவல் கிடைத்தவுடன் குருபரப்பள்ளி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்

மன்னிப்பு
அங்கிருந்த ராணுவத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு இடையே குருபரப்பள்ளி போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஓட்டுநரைத் தாக்கிய ராணுவ வீரர்கள் மன்னிப்பு கேட்டால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என்று பொதுமக்கள் போலீசாரிடமும் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள். போலீசார் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு ராணுவ உதவி ஆய்வாளர் பிரதாப் அங்கிருந்த மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை
அதன் பின்னரே பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதையடுத்து போக்குவரத்து சீர் செய்யப்பட்டு, ராணுவத் தளவாடங்கள் ஏற்றி வந்த வாகனம் பத்திரமாகச் சென்றது. இந்த சம்பவத்தில் காயமடைந்த ஓட்டுநர் தமிழரசு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications