கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல்.. குறுகிய காலத்தில் 11 கல்லூரி.. முதல்வர் பெருமிதம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி பகுதியில், புதிய அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைகிறது. இதற்காக, போலுப்பள்ளியில் 25 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.348 கோடி மதிப்பில் மருத்துவக் கல்லூரி, கட்டப்படுகிறது.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனைக்கான, அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் அன்பழகன், விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், துரைக்கண்ணு, கடம்பூர் ராஜு, உதயகுமார், வெல்லமண்டி நடராஜன், வீரமணி ராஜேந்திர பாலாஜி. நிலோபர் கபிர், பாண்டியராஜன், சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆயுதப்படை போலீசார் உட்பட 1000த்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:
கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்திலிருந்து இந்த பகுதி கிருஷ்ணகிரி என்று அழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள தளி என்ற ஊரை, ஆங்கிலேயர்கள், குட்டி இங்கிலாந்து என்று அழைப்பார்கள். ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட குதிரை வளர்ப்பு மையம் இந்த மாவட்டத்தில்தான் உள்ளது. ஓசூர் மிகப்பெரிய தொழில் நகரமாக உள்ளது.
2004-ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்திலிருந்து கிருஷ்ணகிரியை பிரித்து தனி மாவட்டமாக உருவாக்கியவர் ஜெயலலிதா. இந்த மாவட்டத்திற்கு என்று தனியாக ஒரு அரசு மருத்துவக்கல்லூரி இல்லாமல் இருந்தது. இப்பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று அரசு மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசின் அனுமதியை பெற்று இன்று அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.
இந்த மருத்துவக் கல்லூரியை சேர்த்து 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை துவங்க, குறுகிய காலத்தில் மத்திய அரசின் அனுமதியை பெற்ற ஒரே அரசு அதிமுக அரசு தான்.
2021-22ல் மாணவர் சேர்க்கை துவக்கப்படும். கல்லூரி தொடங்குவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள, முதல்வர் மற்றும் சிறப்பு அலுவலரை நியமிக்க, கட்டிடப் பணிகளுக்கு முதற்கட்டமாக 70 கோடியை ஒதுக்கியது இந்த அரசு. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த கல்லூரி கட்டிடம் துவக்கப்படும்.
2011ஆம் ஆண்டு வரை, தமிழகத்தில், 1945 மருத்துவக் கல்லூரி படிப்பிடங்கள்தான் இருந்தன. ஜெயலலிதா இதை அதிகமாக்கினார். 350 இடங்களை நாங்கள் அதிகமாக உருவாக்கியுள்ளோம். 11 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு இப்போது அனுமதி பெற்றுள்ளோம். இதன் மூலம், தமிழகத்தில், 1,150 மருத்துவ கல்வி இடங்கள் புதிதாக உருவாக உள்ளளன. மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு அதிக மருத்துவ கல்வி இடங்களை இந்த அரசு உருவாக்கியுள்ளது.
11 மருத்துவக்கல்லூரிகளும், மிக மிக நவீன தொழில்நுட்பத்துடன் இருக்கும். நேர்த்தியான கட்டிடங்களை, அழகான மருத்துவமனையை நாங்கள் கட்டித் தர உள்ளோம். தனியார் மருத்துவமனையை விடவும் கூடுதல் வசதிகளுடன் இந்த மருத்துவமனைகள் திகழும் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications