டிஜிட்டல் பிட்காயின் மோசடி: கிருஷ்ணகிரி, தருமபுரியில் 8 இடங்களில் ஒரே நேரத்தில் ரெய்டு.. பரபரப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் டிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கிருஷ்ணகிரி, தருமபுரியில் ஒரே நேரத்தில் நேற்றைய தினம் ரெய்டு நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த வரட்டம்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (46). முன்னாள் ராணுவ வீரர். கடந்த 9ஆம் தேதி இவரது தலைமையில் 60-க்கும் மேற்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை கொடுத்தனர்.
ஆட்சியல் ஜெயச்சந்திரபானு ரெட்டியிடம் பிரகாஷ் அளித்த புகார் மனுவில் யுனிவர் காயின் என்ற பெயரில் டிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தி 6 பேர் என்னை சந்தித்தனர்.
எஸ்டிபிஐ அலுவலகத்தில் 'இன்கம் டேக்ஸ்’ திடீர் ரெய்டு.. திரண்ட தொண்டர்கள்.. குவிந்த போலீஸ்.. பரபரப்பு!
ஒசூர்
அதாவது ஓசூர் ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்த அருண்குமார், கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் நந்தகுமார், மத்தூர் அருகே உள்ள கிட்டனூரைச் சேர்ந்த சங்கர், பிரகாஷ், பர்கூர் அடுத்த செட்டிப்பள்ளியைச் சேர்ந்த சீனிவாசன், தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியைச் சேர்ந்த வேலன் ஆகியோர் டிஜிட்டல் பிட்காயினை வாங்கினால் குறைந்த விலைில் அதிக லாபம் கிடைக்கும் என கூறினர்.
7.70 லட்சம் டெபாசிட்
இதை நம்பிய நான் அவர்களுடைய யுனிவர் நிறுவனத்தில் ரூ 7.70 லட்சம் டெபாசிட் செய்தேன். அதில் ஏதோ சிறிய அளவில் மட்டுமே எனக்கு வருமானம் வந்தது. இதனால் எனக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள் என 60 பேரை இந்த நிறுவனத்தில் சேர்த்து டெபாசிட் செய்ய வைத்தேன். அவர்களுக்கும் லாபம் வந்தது.
யுனிவர் காயின்
எங்களுக்கு கிடைத்த லாபம் குறித்து யுனிவர் காயின் இணையதள பக்கத்தில் விளம்பரம் செய்ததால் இதை நம்பி பலர் டெபாசிட் செய்தனர். ஆனால் அவர்களுக்கு 2 வாரங்கள் மட்டுமே லாபம் வரும்படி செய்துவிட்டு பிறகு அவர்களை மோசடி செய்து விட்டனர். இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட 210 பேர் சார்பில் நான் புகார் அளிக்கிறேன்.
ரூ 1000 கோடி
அந்த மோசடி கும்பல் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஏராளமானோரை ரூ 1000 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதை அறிவேன். இந்த மோசடி குறித்து அவர்களிடம் கேட்ட போது அவர்கள் 6 பேரும் அப்படியா அப்படியா என கேட்டு ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்து நாடகத்தை அரங்கேற்றினர். இந்த மோசடி நபர்கள் குறித்து விசாரணை நடத்தி நாங்கள் இழந்த பணத்தை மீண்டும் பெற்றுத் தர வேண்டும் என அந்த புகார் மனுவில் பிரகாஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
ரெய்டு
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸுக்கு ஆட்சியர் பரிந்துரை செய்தார். அதன்படி விசாரணை நடத்தப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி சிவக்குமார், சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், போலீஸார் என 50 - க்கும் மேற்பட்டோர் மோசடியில் ஈடுபட்டவர்களின் வீடு, அலுவலகங்களளில் சோதனை நடத்தினர்.
8 இடங்களில் அதிரடி
அது போல் ஓசூரில் தேன்கனிக்கோட்டை சாலையில் டிஎஸ்பி அலுவலகம் அருகே உள்ள நிறுவனத்திலும் நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7 இடங்களிலும் தருமபுரி மாவட்டத்தில் ஒரு இடத்திலும் என மொத்தம் 8 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.