விஜய்யை வீழ்த்த மெகா கூட்டணி? அம்பாசமுத்திரத்தில் சீமான் ‘பொது வேட்பாளர்’? Initiative எடுத்த திமுக?
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை பொது வேட்பாளராக களமிறக்க திமுக, அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
"அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை" என்ற பொன்மொழிக்கு இலக்கணமாக, தமிழக அரசியல் வரலாற்றிலேயே இதுவரை யாரும் கற்பனை செய்து பார்க்காத ஒரு மெகா கூட்டணித் திட்டம் திரைக்குப் பின்னால் தயாராகி வருவதாகக் கோட்டை வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.

தமிழகத்தில் காலியாக உள்ள அம்பாசமுத்திரம், திருச்சி கிழக்கு, மதுராந்தகம், விராலிமலை, பெருந்துறை மற்றும் தாராபுரம் ஆகிய 6 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரவிருக்கும் நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களும் கைகோர்த்து ஒரு மாஸ்டர் பிளான் போட்டு வருவதாகத் தகவல் கசிந்துள்ளது. அதிலும் இந்த பேச்சுவார்த்தையை திமுக தொடங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
"அம்பாசமுத்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை பொது வேட்பாளராக நிறுத்துவது!மண்ணும் விண்ணும் முட்டினாலும் திமுகவும் அதிமுகவும் ஒன்று சேராது என்பதுதான் தமிழகத்தின் எதார்த்தம். ஆனால், இந்த இரு கட்சிகளையும் ஒரே நேர்க்கோட்டில் சிந்திக்க வைத்திருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்.
இந்தத் திடீர் வியூகத்திற்குப் பின்னால் இரு முக்கியக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. தவெக கட்சி தொடங்கப்பட்டதில் இருந்தே, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளையும், எம்.எல்.ஏ-க்களையும் விஜய் தனது பக்கம் இழுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிமுகவின் வாக்கு வங்கி சிதைந்து விடுமோ என்ற அச்சத்திலும், விஜய் மீது கடுமையான கோபத்திலும் இருக்கிறார் இ.பி.எஸ்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான திமுகவை, தவெக மேடைகளில் மிகக் காட்டமாகவும், நேரடியாகவும் விமர்சித்து வருகிறது. இதனால் திமுக தலைமையும் தவெக மீது கடும் அதிருப்தியில் உள்ளது.இந்தச் சூழலில், வரவிருக்கும் 6 தொகுதி இடைத்தேர்தலில் வழக்கம் போல திமுக, அதிமுக, தவெக, நாதக எனப் பலமுனைப் போட்டி நிலவினால், அது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் வாக்குகளைப் பிரித்து, தவெக-வுக்குச் சாதகமாக முடிந்துவிடும் என இரு கட்சிகளுமே கணக்குப் போடுகின்றன.
ஏன் அம்பாசமுத்திரம்
தவெக தென் மாவட்டங்களில் தங்களது பலத்தைக் காட்ட வியூகம் வகுத்து வரும் நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதியை அவர்கள் குறிவைப்பதாகத் தெரிகிறது. அங்கு விஜய்யின் வேகத்திற்கு முட்டுக்கட்டை போட வேண்டுமானால், அதற்குச் சரியான நபர் சீமான் மட்டுமே என்பது திரைக்குப் பின்னால் நடக்கும் பேச்சவார்த்தையின் சாரம்சம்.
"திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டு வாக்குகளைப் பிரிப்பதை விட, தங்களின் செல்வாக்கை மறைமுகமாகச் செலுத்தி, சீமானை ஒரு 'பொது வேட்பாளராக' (Common Candidate) நிறுத்தினால், தவெக-வின் வாக்குகள் சிதறும். இதன் மூலம் விஜய்யின் தவெகவுக்கு ஒரு கடுமையான தோல்வியைப் பரிசளிக்கலாம்" என்பதே இரு திராவிடக் கட்சிகளின் கணக்கு.
சீமான் சம்மதிப்பாரா?
இந்தத் திட்டம் கேட்பதற்கு அரசியல் ரீதியாகப் பலமான லாஜிக்கைக் கொண்டிருந்தாலும், "இதற்கு சீமான் ஒப்புக்கொள்வாரா?" என்ற கேள்விதான் இப்போது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
சீமானின் அரசியல் நிலைப்பாடு: "திராவிடக் கட்சிகளுக்கு மாற்று நாங்கள்தான்" என்று கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனித்துப் போட்டியிட்டு 10% வாக்கு வங்கியைச் சேர்த்தவர் சீமான்.
திராவிடக் கட்சிகளின் சமரசக் கணக்கு: தவெக என்ற புதிய சக்தியை ஆரம்பத்திலேயே முடக்க வேண்டுமானால், தற்காலிகமாகப் பிடிவாதங்களைத் தளர்த்தி சீமான் கைகோர்க்க வேண்டும் என எதிர்பார்க்கின்றன.
சீமான் கொள்கை முரண்: திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் மேடைகளில் கடுமையாக விமர்சித்து வரும் சீமான், அவர்களின் மறைமுக ஆதரவை ஏற்பது அவரது அரசியல் பிம்பத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
திராவிடக் கட்சிகளின் எதிர்பார்ப்பு: "எதிரிக்கு எதிரி தோழன்" என்ற அடிப்படையில், தவெகவின் எழுச்சியைத் தடுக்க சீமானும் இந்த ரகசியப் பேச்சுவார்த்தைக்கு இணங்க வாய்ப்புள்ளதாக ஒரு தரப்பு நம்புகிறது. சினிமாப் போட்டியைத் தாண்டி, நிஜ அரசியல் களத்தில் விஜய்யை வீழ்த்தத் திராவிடக் கட்சிகள் ஒன்று சேருமா? அல்லது வழக்கம் போலத் தனித்து நின்று களம் காண்பேன் என்று சீமான் கம்பீரம் காட்டுவாரா?
இந்த ரகசியப் பேச்சுவார்த்தை உண்மையாகும் பட்சத்தில், தமிழக இடைத்தேர்தல் களம் இதுவரை கண்டிராத ஒரு புதிய அரசியல் போர்க்களமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை! ஏற்கெனவே நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் அதிமுகவும் திமுகவும் இணைந்து ஆட்சி நடத்தலாம் என பேச்சுவார்த்தை நடத்தியதாக அதிமுகவின் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் குற்றம்சாட்டியிருந்தனர். இந்த முடிவுக்கு அதிமுகவின் பெரும்பாலானோர் ஒப்புக் கொள்ளாததால் அது அப்படியே கைவிடப்பட்டதாக சொல்லப்படும் நிலையில் மீண்டும் ஒரு முறை இரு கட்சிகளும் இணைய போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.












Click it and Unblock the Notifications