ஆட்சியில் இல்லாதபோதே அராஜகம்.. திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்.. போட்டு தாக்கும் முதல்வர் பழனிசாமி
கிருஷ்ணகிரி: இந்தியாவில் ஜாதி மத சண்டை இல்லாத ஒரே மாநிலம் தமிழகம் தான் என்று பிரசாரத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, உதயநிதி ஸ்டாலின் போலீஸ் அதிகாரியை மிரட்டுகிறார், அவரது தந்தை ஸ்டாலின் அரசு அதிகாரிகளை மிரட்டுகிறார் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்னும் சில வாரங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அசோக்குமாரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, முதல்வர் பழனிசாமி இந்தியாவில் ஜாதி மத சண்டை இல்லாத ஒரே மாநிலமாகத் திகழ்வது தமிழகம் தான் என்று பெருமிதம் கொண்டார்.

ஜாதி, மதச் சண்டை இல்லாத ஒரே மாநிலம்
தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி, கிருஷ்ணகிரி அதிமுகவின் எக்கு கோட்டை என்றும் ஜெயலலிதா மறைவுக்குப் பின் நடக்கும் இந்த முதல் சட்டசபை தேர்தலில் எதிரிகளை நாம் வீழ்த்த வேண்டும் என்றும் பேசினார். இந்தியாவிலேயே ஜாதி சண்டை மதச் சண்டை இல்லாத ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான் என்றும் ஸ்டாலின் தொடர்ந்து பொய் பிரசாரங்களைச் செய்து வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

திமுக மீது கடும் தாக்கு
2011ஆம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா அறிவித்தது போல் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் வழங்கப்பட்டது. ஆனால் 2006 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த இரண்டு ஏக்கர் நிலம் யாருக்கு வழங்கியுள்ளார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், மக்களின் நிலங்களை திமுக அபகரிக்காமல் இருந்தால் போதும் என்றும் அவர் விமர்சித்தார்.

பாடம் புகட்ட வேண்டும்
மேலும் முதல்வர் பேசுகையில், "ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் இந்த அரசுக்கு பல்வேறு சிரமங்களைக் கொடுத்தார். ஆனால் அதை நாம் தவிடுபொடியாக்கி உள்ளோம். அதிமுகவை அழிக்க நினைப்பவர்களுக்கு இந்த தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். அதிமுக நாட்டு மக்களுக்கான கட்சி. ஆனால் திமுக ஒரு குடும்பத்திற்கான கட்சி.

தந்தையும் மகனும்
திமுக தலைவர் ஸ்டாலின் தனது மகன் அரசியலுக்கு வர மாட்டார் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்தார் ஆனால் தற்போது உதயநிதி ஸ்டாலின் தான் திமுகவின் தேர்தல் அறிக்கையையே வெளியிடுகிறார். உதயநிதி ஸ்டாலின் போலீஸ் அதிகாரியை மிரட்டுகிறார். அவரது தந்தை ஸ்டாலின் அரசு அதிகாரிகளை மிரட்டுகிறார். ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோது அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள்" என்று கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

வளர்ச்சி பணிகள்
கிருஷ்ணகிரி பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், "கிருஷ்ணகிரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை 436 கோடியில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஊத்தங்கரை தொகுதியில் மட்டும் 8 அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஆண்டுக்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வாஷிங்மெஷின் வழங்கப்படும் அதேபோல கட்டணமில்லாத இலவச கேபிள் இணைப்பு வழங்கப்படும். நிலம் வீடு இல்லாத ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications