டீ வாங்க பள்ளி மாணவர்களை ஏவிய ஆசிரியர்கள்.. கிருஷ்ணகிரியில் சாட்டையை சுழற்றிய மக்கள்.. என்னாச்சு?
அரசுப் பள்ளி மாணவர்கள் அங்குள்ள ஒரு டீ கடைக்கு வந்து டீ, பிஸ்கெட், கேக் உள்ளிட்ட பொருட்களை வாங்கியுள்ளனர்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் டீ, காபி வாங்கி வரும் வேலையில் அரசுப் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தும் ஆசிரியர்களுக்கு எதிராக பொதுமக்களே பள்ளிக்கல்வித் துறைக்கு புகார் அளித்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த்துள்ளது.
பள்ளி மாணவர்களை படிப்பை தவிர வேறு எந்த வேலையையும் செய்ய ஆசிரியர்கள் அனுப்பக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரடியாக உத்தரவிட்டுள்ள போதிலும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

மாணவர்களை இவ்வாறு வேலை வாங்கும் ஆசிரியர்கள் மீதும், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழத்தில் உள்ள சில அரசுப் பள்ளிகளில் மாணவர்களை தங்கள் சொந்த தேவைக்கு ஆசிரியர்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, வகுப்பு நேரத்தில் தங்களுக்கு தேவையான பொருட்கள், தின்பண்டங்களை வாங்கி வர சொல்வது, வகுப்பறைகளை பெருக்க செய்வது, பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்ய வைப்பது போன்ற அவலங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு ஈரோட்டில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், கழிவறைகளை சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த பள்ளி தலைமை ஆசிரியையை போலீஸார் கைது செய்தனர். இதேபோல, அண்மையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள அரசுப் பள்ளியிலும், கழிவறைகளை மாணவர்கள் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சூழலில், பள்ளி மாணவர்களை படிப்பை தவிர வேறு எந்த வேலையிலும் ஈடுபடுத்தக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவங்கள் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள்ளாக, கிருஷ்ணகிரியில் மற்றொரு சம்பவம் நடந்திருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஆண்டியூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவர்கள் அங்குள்ள ஒரு டீ கடைக்கு வந்து டீ, பிஸ்கெட், கேக் உள்ளிட்ட பொருட்களை இன்று வாங்கியுள்ளனர்.
இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். பள்ளி நடந்து கொண்டிருக்கும் போது யார் உங்களை டீ வாங்கி வர அனுப்பியது என அவர்கள் கேட்டனர். அதற்கு அந்த மாணவர்கள், கணக்கு ஆசிரியர் இளங்கோ தான், தங்களை டீ வாங்கி வர அனுப்பியதாக கூறினர். இதை வீடியோ எடுத்த அங்கிருந்த மக்கள், இதை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். மேலும், பள்ளிக்கல்வித் துறையின் ட்விட்டர் கணக்கிற்கும் இந்த வீடியோவையும், புகாரையும் பொதுமக்கள் அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications