பென்ஷன்.. பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ்.. சேலம் விஏஓ - ஓசூர் முத்திரை ஆய்வாளர் சிக்கியது எப்படி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, முத்திரை ஆய்வாளர் அலுவலகத்தில் முத்திரை பணியாளராக நாகராஜன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவர் வயது மூப்பின் காரணமாக வருகிற 30-ந் தேதி ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில் அவருக்கு ஓய்வுகால பணபலன்களுக்கான ஆவணங்களை கொடுப்பதற்காக ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முத்திரை ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, முத்திரை ஆய்வாளர் அலுவலகத்தில் முத்திரை பணியாளராக நாகராஜன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 58 வயது ஆகிறது.. வருகிற 30-ந் தேதி ஓய்வு பெற இருந்தார். இவர், தனது ஓய்வு கால பண பலன்களுக்கான ஆவணங்களை கொடுப்பதற்காக ஓசூர் முத்திரை ஆய்வாளர் தமிழ்ச்செல்வனை அணுகியுள்ளார். அப்போது அவர், ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத நாகராஜன், இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் நேற்று புகார் அளித்தார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் அறிவுரையின் பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூ.30 ஆயிரத்தை நாகராஜன், முத்திரை ஆய்வாளர் தமிழ்ச்செல்வனிடம் கொடுத்துள்ளார்.. அந்த பணத்தை அவர் பெற்றுக்கொண்ட போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் டிஎஸ்பி (பொறுப்பு) நாகராஜன், கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் முத்திரை ஆய்வாளர் தமிழ்ச்செல்வனை சுற்றி வளைத்து பிடித்தார்கள். அவரிடம் இருந்து லஞ்ச பணம் மற்றும் சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார், தமிழ்ச்செல்வனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
சேலம் மாவட்டம் ஓமலூரில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான கிராம நிர்வாக அலுவலர் உள்பட 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே செல்லப்பிள்ளை குட்டை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்ற கட்டிட தொழிலாளி கடந்த வாரம் தனது நிலத்திற்கு பட்டா மாற்றவும், வாரிசு சான்றிதழ் கேட்டும் வருவாய் துறை அதிகாரிகளிடம் விண்ணப்பம் செய்துள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், உதவியாளர் பெருமாள் ஆகியோர் ராஜேந்திரனிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டனர். இதையடுத்து கடந்த ஏப்ரல் 2-ந் தேதி அவர்களிடம் லஞ்சம் கொடுத்த போது இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் விசாரணைக்கு பிறகு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். இந்நிலையில், லஞ்சம் வாங்கி கைதான செல்லப்பிள்ளை குட்டை கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், உதவியாளர் பெருமாள் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று அவர்கள் இருவரையும் பணி இடைநீக்கம் செய்து மேட்டூர் சப்-கலெக்டர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications