நிவாரண உதவிகள்... கிருஷ்ணகிரி அதிமுகவில் தொடரும் பனிப்போர்... ஓவர்டேக் செய்த திமுக
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமிக்கும், பாலகிருஷ்ண ரெட்டிக்கும் இடையான பனிப்போர் காரணமாக நிவாரணப் பணிகளில் திமுக ஓவர் டேக் செய்துள்ளது.
தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கிறது.
ஜெயலலிதா தோல்வியை தழுவிய பர்கூர் தொகுதி இந்த மாவட்டத்தில் தான் உள்ளது. இயல்பாகவே அதிமுகவின் வாக்கு வங்கி சற்று அதிகம் உள்ள மாவட்டம் இது.

கிழக்கு; மேற்கு
கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுகவை பொறுத்தவரை கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்குப் பகுதியை முன்னாள் அமைச்சரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி தனது கோட்டையாக வைத்துள்ளார். மேற்கை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு ஓரளவு செல்வாக்கு உண்டு.

உயர்பதவி
ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையே பனிப்போர் தொடருவதாக கூறப்படுகிறது. கே.பி.முனுசாமி கட்சியில் உயர்பதவியில் இருப்பதாலும், எம்.பி.யாக இருப்பதாலும் நிவாரண உதவிகளை தனது பகுதியில் முழு வீச்சில் செயல்படுத்தியுள்ளார். ஆனால் நீதிமன்ற தீர்ப்பால் அமைச்சர் பதவியை பறிகொடுத்த பாலகிருஷ்ண ரெட்டி ஒசூர், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதில் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

நிவாரண உதவிகள்
இதனிடையே அதனை சாதகமாக பயன்படுத்திய ஒசூர் முன்னாள் நகர்மன்றத் தலைவரும், திமுக நிர்வாகியுமான மாதேஸ்வரன், ஆட்டோ ஓட்டுநர்கள், கூலி வேலைக்கு செல்வோர்கள் மட்டுமல்லாமல் கஷ்டப்படக் கூடிய அதிமுக தொண்டர்களுக்கும் அரிசி சிப்பங்கள், காய்கறிகளை விநியோகித்துள்ளார். இதேபோல் ஒசூரை பொறுத்தவரை தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதி என்பதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி இருந்ததால் அவர்கள் மத்தியில் இதற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

இயல்பு நிலை
மாதேஸ்வரன் ஒசூரில் தன்னை ஓவர்டேக் செய்வதை அறிந்து சுதாரித்துக்கொண்ட பாலகிருஷ்ண ரெட்டி இப்போது அரிசி மூட்டைகளை வழங்கி வருகிறார். இருப்பினும் தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்புவதால் ஏப்ரல் மாதம் இருந்த எதிர்பார்ப்பு இப்போது மக்கள் மத்தியில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications