கரசேவை.. ஜெயலலிதா பெயரை இழுத்து.. எடப்பாடி பழனிச்சாமி கனவை சல்லி சல்லியாய் நொறுக்கிய முனுசாமி!
கிருஷ்ணகிரி: ''கரசேவைக்கு செல்ல கட்டளையிட்டவர் ஜெயலலிதா'' எனப் பேசி எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி கனவை சல்லி சல்லியாய் நொறுக்கியிருக்கிறார் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி.
சிறுபான்மை சமுதாய மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் எடப்பாடி பழனிசாமி இத்தனை நாட்களாக முன்னெடுத்த எல்லா முயற்சிகளையும் ஒரே பேட்டியில் தூள் தூளாக உடைத்துவிட்டார் கே.பி.முனுசாமி. அயோத்தியில் நடைபெறும் ராமர்கோவில் கும்பாபிஷேகத்தில் அதிமுக கலந்துகொள்ளுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது, கரசேவைக்கு செல்ல கட்டளையிட்டவர் ஜெயலலிதா எனக் கூறியிருக்கிறார்.

ராமர் கோவில் திருப்பணிக்கு தங்கள் தலைவர் முழு ஆதரவை தெரிவித்திருக்கிறார் என்றும் அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் ஜெயலலிதாவின் நிலைப்பாடு தான் தங்கள் நிலைப்பாடு என்றும் மிகத் திட்டவட்டமாக கே.பி.முனுசாமி கூறியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டிருப்பதால், உடல்நலம் சரியாகிய பிறகு ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு செல்வது பற்றி அவர் முடிவெடுப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இவ்வாறு கூறினார்.
ராமர் கோவிலை வைத்து தாங்கள் அரசியல் பேச விரும்பவில்லை என்று கூறியபடியே அரசியல் பேசினார் கே.பி.முனுசாமி. இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக சிறுபான்மை சமுதாய மக்கள் மத்தியில் அதிமுக மீதான பார்வையை வேறு விதமாக மாற்றி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதன் வெளிப்பாடாக தான் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநாட்டில் ஆர்வமுடன் கலந்துகொண்டார். அதேபோல் தமிமுன் அன்சாரியை எப்படியாவது அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சித்து வருகிறார்.
வெண்ணெய் திரண்டு வரும் போது பானையை உடைத்த கதையாக சிறுபான்மை சமுதாய அமைப்புகள் எடப்பாடி பழனிசாமியை அணுக ஆரம்பித்துள்ள தருணம் பார்த்து, ''கரசேவைக்கு செல்ல கட்டளையிட்டவர் ஜெயலலிதா'' எனப் பேசி எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி கனவை சிதைத்திருக்கிறார் கே.பி.முனுசாமி. இது சிறுபான்மை சமுதாய மக்கள் மத்தியில் அதிமுக மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கிவிடும் என பதறும் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள், கே.பி.முனுசாமி பழசை எதற்கு இப்போது கிளறினார் என ஆராயத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications