ஓசூர் அருகே ஆசை ஆசையாய் கட்டிய அத்தை மகள்.. மகேந்திரனுக்கு வந்ததே ஆத்திரம்.. நடந்த பயங்கரம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கணவனிடம் கோபித்துகொண்டு தாய் வீட்டுக்கு சென்று திரும்பிய மனைவி கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் கோட்டை தெருவை சேர்ந்த மகேந்திரன் அந்த பகுதியில் பூ வியாபாரம் செய்து வரும் பூ வியாபாரி ஆவார். மகேந்திரனுக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தன்னுடைய சொந்த அத்தை மகளான பாரதியை திருமணம் செய்தார்.

இந்த நிலையில் எட்டு வருடங்களாக மகேந்திரன் பாரதி தம்பதிக்கு குழந்தை இல்லாத நிலையில் மகேந்திரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனிடையே மகேந்திரன் அடிக்கடி குடிபோதையில் வந்து மனைவி பாரதியிடம் சண்டை போட்டு வந்தாராம். இதே போல் தொடர்ந்து செய்து வந்த மகேந்திரன், ஒரு கட்டத்தில் குடிக்கு முழுமையாக அடிமையாகி, மனைவியை துன்புறுத்தி வந்தாராம்.
இதனையடுத்து அவரது உறவினர்கள் மகேந்திரனை கர்நாடகா மாநிலம் சர்ஜாபுரத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற வைத்திருக்கிறார்கள். இருப்பினும் மீண்டும் மதுபோதைக்கு அடிமையாகி மனைவி பாரதியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாராம் மகேந்திரன்.
இதே போல் தொடர்ந்து செய்துவந்ததால் மனமுடைந்த அவரது மனைவி பாரதி கடந்த 15 நாள்களுக்கு முன்பு திப்பாளத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார் இதனால் மகேந்திரன் கடும் கோபத்தில் இருந்தாராம். இந்த நிலையில் நேற்று இரவு தனது கணவர் வீட்டுக்கு திரும்பி உள்ளார் பாரதி.
இந்நிலையில் இன்று காலை மகேந்திரானால் பாரதி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பாகலூர் போலிசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், பாரதியின் கணவரை கைது செய்ய முயன்ற போது அவர் தலைமறைவாகியது உறுதியானது. இதனையடுத்து தப்பியோடிய மகேந்திரனை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். கோபித்துகொண்டு தாய் வீட்டுக்கு சென்று திரும்பிய மனைவியை, குடிபோதைக்கு அடிமையான கணவன் கொலை செய்த சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications