லாரி கண்டெய்னரில் 39 பேரின் உடல்கள் கண்டெடுப்பு.. இங்கிலாந்தில் பரபரப்பு
Recommended Video
லண்டன்: இங்கிலாந்தில் லாரி கண்டெய்னரில் 39 பேரின் உடல்கள் கண்டுபிடிப்பட்டு இருப்பது அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இது தொடர்பாக வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த 25 வயது லாரி டிரைவரை பிடித்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இங்கிலாந்து நாட்டின் எசெக்ஸ் மாகாணத்தில் உள்ள கிரேஷ் நகரில் வாட்டர்கிளேட் தொழில்துறை பூங்காவில் அதிகாலை 1.40 மணிக்கு நின்று இருந்த ஒரு லாரி கண்டெய்ணரில் ஒரு இளைஞர் உள்பட 39 பேரின் உடல்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

எசெக்ஸ் போலீசார்
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள கொலை தொடர்பாக எசெக்ஸ் மாகாண போலீசார் சந்தேகத்தின் பேரில் வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த 25 வயது லாரி டிரைவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

விசாரிக்கிறோம்
இது தொடர்பாக எசெக்ஸ் மாகாண காவல்துறை உயர் அதிகாரி ஆண்ட்ரூ மரைனர் கூறுகையில், "இது ஒரு சோகமான சம்பவம், ஏராளமான மக்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். என்ன நடந்தது என்பது குறித்து எங்கள் விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இருப்பினும் இதற்கு நீண்ட நேரம் ஆகும் என்று எதிர்பார்க்கிறேன்.

பல்கேரியா லாரி
சந்தேகத்திற்கு உரிய லாரி பல்கேரியாவைச் சேர்ந்தது என்று நாங்கள் நம்புகிறோம், அக்டோபர் 19 சனிக்கிழமையன்று ஹோலிஹெட் வழியாக நாட்டிற்குள் நுழைந்திருக்கிறது. நாங்கள் இதைபற்றி தீவிரவமாக விசாரித்து வருகிறோம். நாங்கள் லாரி டிரைவரை கைது செய்து போலீஸ் காவலில் வைத்து விசாரித்து வருகிறோம் என்றார்.

ஆழ்ந்த இரங்கல்
எனினும் அவர்கள் இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக குடியேற முயன்ற அகதிகளாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. கன்டெய்னரில் 39 பேர் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தன்னை அதிர்ச்சியடைய செய்ததாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "இந்த சம்பவத்தின் பின்னணியை அறிய எசெக்ஸ் நகர போலீசாருடன் இணைந்து உள்துறை அமைச்சகம் செயல்படுகிறது. இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications