வங்கதேசம் இருக்கட்டும்.. அங்க மொத்த பிரிட்டனும் பற்றி எரியுது! 1.8 லட்சம் இந்திய மாணவர்கள் நிலை என்ன
லண்டன்: பிரிட்டன் நாட்டில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வன்முறை ஏற்பட்டுள்ளது. புலம்பெயர்ந்தோர் மற்றும் இஸ்லாமியர்களைக் குறிவைத்து அங்கு வன்முறை நடந்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. பிரிட்டனில் இந்தளவுக்கு நிலைமை மோசமாக என்ன காரணம்.. இந்த வன்முறைக்குக் காரணம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
வங்கதேசத்தைப் போலவே இப்போது பிரிட்டன் நாட்டிலும் வன்முறை பரவி வருகிறது. அங்கு லண்டனுக்கு வெளியே பல இடங்களில் மோசமான வன்முறை ஏற்பட்டுள்ளது.

என்ன காரணம்: இவை அனைத்திற்கும் காரணம் போலி செய்தி தான். அதாவது கடந்த ஜூலை 29ம் தேதி வடக்கு இங்கிலாந்தின் சவுத்போர்ட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கத்திகுறித்து தாக்குதல் நடந்தது. இதில் மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டனர். மேலும் எட்டு குழந்தைகள் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த கொடூர தாக்குதலை நடத்திய 17 வயதான ஆக்சல் ருடகுபனா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இந்த ஆக்செல் ருடகுபனா பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் உள்ள கார்டிஃப் நகரில் பிறந்து வளர்ந்தார். இருப்பினும், அவர் வெளிநாட்டில் இருந்து குடியேறிய முஸ்லீம் என்று சமூக வலைத்தளங்களில் தறான தகவல்கள் வேகமாக பரவியது. இதனால் அடுத்த நாளே சவுத்போர்ட்டில் மோசான வன்முறை ஏற்பட்டது. உள்ளூர் மசூதியைத் தாக்கும் முயற்சியும் நடத்தப்பட்டது.
வன்முறை: அப்போது ஆரம்பித்த வன்முறை மளமளவென நாடு முழுக்க பரவி இருக்கிறது. வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தீவிரமாக முயன்று வருகிறார்கள். இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக 111 பேரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இருப்பினும், சுண்டர்லேண்ட், மான்செஸ்டர், பிளைமவுத் மற்றும் பெல்ஃபாஸ்ட் உட்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் கலவரங்கள் வெடித்தன.
இதில் போராட்டத்தில் ஈடுபடுவோர் புலம்பெயர்ந்தோர் மற்றும் இஸ்லாமியர்களை குறிவைத்து அவர்களின் கடைகளை சேதப்படுத்தி வருகிறார்கள். மேலும், போலீசார் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
பின்னணியில் யார்: தீவிர வலதுசாரி இயக்கங்களே இந்த வன்முறைக்குப் பின்னால் இருப்பதாகப் பிரிட்டனில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள கெய்ர் ஸ்டார்மர் அரசு குற்றஞ்சாட்டுகிறது. அவர்கள் திட்டமிட்டு தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் போலீசார் கூறுகின்றனர். மேலும், சமூக வலைத்தள நிறுவனங்களும் கூட தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளனர்.
பிரிட்டன் நாட்டின் உள்ள சில தீவிர வலதுசாரி இயக்கங்கள் புலம்பெயர்ந்தோரால் வன்முறை மற்றும் குற்றச்செயல்கள் அதிகரிப்பதாகக் கூறியே இந்த போராட்டத்தை நடத்துகிறார்கள். அவர்களின் இந்த குற்றச்சாட்டிற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்ற போதிலும், தொடர்ந்து இதையே கூறி வருகிறார்கள். இதுவே வன்முறை மளமளவெனப் பரவ காரணமாக இருக்கிறது.
இந்தியர்கள்: இந்த போராட்டத்தால் பிரிட்டனில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் எழுந்துள்ளது. ஏனென்றால் பிரிட்டனில் இப்போது சுமார் 1.8 லட்சம் மாணவர்கள் உள்ளனர். இந்திய மாணவர்கள் செல்லும் டாப் 5 வெளிநாடுகளில் ஒன்றாகப் பிரிட்டன் இருக்கிறது. இதற்கிடையே இங்கிலாந்திற்குச் செல்லும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி இந்தியாவும் ஆலோசனையை வழங்கியுள்ளது. பல பிரிட்டிஷ் நகரங்களில் வன்முறை அதிகமாக இருப்பதால் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications