உருமாறிய கொரோனா... வேகமெடுக்கும் பரவல்... ஜூன் வரை ஊரடங்கு... பிரிட்டன் பிரதமர் தகவல்
லண்டன்: உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதால் வரும் ஜூன் மாதம் வரை பிரிட்டனில் ஊரடங்கு நீடிக்கப்படலாம் என்று அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகப் பிரிட்டன் உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஃபைசர், மாடர்னா மற்றும் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிகளுக்கு அந்நாட்டில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு இறுதியிலேயே பிரிட்டனில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கும் முதியவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறுகிறது. இன்னும் சில வாரங்களில் 1.5 கோடி பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனா
இந்தச் சூழ்நிலையில், கடந்த நவம்பர் மாதம் பிரிட்டன் நாட்டில் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டது. இந்த உருமாறிய கொரோனா, மற்ற வகைகளைவிட 70% மடங்கு வேகமாகப் பரவுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இந்த உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது வரை 60 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஊரடங்கில் தளர்வு இல்லை
உருமாறிய கொரோனாவைக் தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம், பிரிட்டனில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் மாதம் வரை இந்த ஊரடங்கு இருக்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் மாதத்திற்குப் பின் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, தற்போதுள்ள சூழ்நிலையில் ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அந்நாட்டின் உள்துறைச் செயலர் ப்ரீத்தி படேல் தெரிவித்தார்.

ஜூன் வரை ஊரடங்கு
பிரிட்டனில் ஊரடங்கு ஜூன் மாதம் வரை நீடிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேரடியாக பதிலளிக்கவில்லை. மாறாக, "பிரிட்டன் தற்போது மிக மோசமான உருமாறிய கொரோனாவை எதிர்கொண்டுள்ளது. அடுத்து வரவிருக்கும் ஒரு சில வாரங்கள் பிரிட்டனுக்கு கடினமாதனாக இருக்கும்" என்றார். எனவே, பிரிட்டனில் வரும் ஜூன் வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசுக்கு நெருக்கடி
இருப்பினும், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியினரே ஊரடங்கில் விரைவில் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு நெருக்கடி அளித்து வருகின்றனர். பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் 1.5 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் அதன் பின்னர் ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஊரடங்கு அதிக காலம் நீடித்தால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், தற்போதைய சூழலில் அந்நாட்டு அரசுக்கு ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்கும் எண்ணம் எதுவும் இல்லை.

கொரோனாவால் பாதிக்கப்பட்டால் 500 பவுண்ட்
பிரிட்டன் நாட்டில் இதுவரை 35 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால் எங்கு தங்களால் வேலைக்குச் செல்ல முடியாமல் வருமானம் தடைப்படுமோ என்று பலரும் அஞ்சுகின்றனர். இதைக் கருத்தில்கொண்டு கொரோனா உறுதி செய்யப்படும் பிரிட்டன் ஒவ்வொரு குடிமகனுக்கும் 500 பவுண்டு வழங்குவது குறித்தும் அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது.












Click it and Unblock the Notifications