புதிய வகை கொரோனா பிரிட்டனில் ஒரே நாளில் 33,364 பேர் பாதிப்பு - தென்ஆப்ரிக்காவிலும் பாதிப்பு
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதால் ஒரே நாளில் 33,364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லண்டன்: பிரிட்டனில் புதிதாக 33,364 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. உலக அளவில் கொரோனா தொற்று பரவி வரும் நாடுகளின் எண்ணிக்கையில் பிரிட்டன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அங்கு புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பிரிட்டனைப் போல தென் ஆப்ரிக்காவிலும் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது.
அமெரிக்காவில் புதிதாக 176,293 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் புதிதாக 33,364 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ரஷ்யாவில் 29,350 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.பிரேசில் நாட்டில் 25,621 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. இந்தியாவில் 19,174 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

பிரிட்டனில் மாற்றமடைந்த புதிய வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் 70 சதவிகிதம் வேகமாகப் பரவுகிறது என்ற தகவலும் கவலையளிக்கிறது.
பிரிட்டனில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஒரே நாளில் 33 ஆயிரத்து 364 பேருக்கு தொற்று உறுதியானதால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்து 73 ஆயிரத்தைக் கடந்துள்ளது
கொரோனா வைரஸ் காரணமாக அங்கு 215 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 67 ஆயிரத்து 616 ஆக உள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. புதிதான பரவி வரும் கொரோனா வைரஸ் பற்றிப் பேசியுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தாக்குவதற்கான முறையை வைரஸ் மாற்றும்போது, நம்முடைய பாதுகாப்பு வழிமுறைகளை நாமும் மாற்றியாக வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

பிரிட்டனில் மட்டுமன்றி தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளிலும் இந்தப் புதிய வைரஸ் தென்படுகிறது. நவம்பர் மாத இடையிலிருந்து நடத்தப்பட்ட ஆய்வில் தென் ஆப்பிரிக்காவில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் 90 சதவிகிதம் இந்தப் புதிய வைரஸ்தான்.
புதிய வகை வைரஸ் பரவல் காரணமாக, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா, அயர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பயணக் கட்டுப்பாடுகள், பொது முடக்கம் உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளன. இன்னும் சில நாடுகள் இவற்றை அமல்படுத்தத் திட்டமிட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications