101 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட கிழக்கிந்திய நிறுவனம்.! திடீரென திவால் ஆனதாக அறிவிப்பு!
லண்டன்: வரலாற்றின் பவர்புல் வணிகப் பேரரசாக கருதப்படும் கிழக்கிந்திய நிறுவனம் திவாலாகி உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவை நேரடியாக ஆளும் முன்பு, கிழக்கிந்திய நிறுவனமே இந்தியாவை ஆட்சி செய்து வந்தது. இந்த நிறுவனத்தை இந்தியர் ஒருவர் வாங்கி நடத்தி வந்த நிலையில், அது இப்போது திவாலாகியுள்ளது.
பிரிட்டிஷார் வணிகம் செய்வதாகவே முதலில் இந்தியா வந்ததும், அதன் பிறகே இந்தியாவைத் தங்கள் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்ததும் அனைவருக்கும் தெரியும். அப்படி வணிகம் செய்ய வந்ததாகச் சொல்லி வந்தபோது பிரிட்டனின் பிரதான நிறுவனமாக இருந்தது கிழக்கிந்திய நிறுவனம். சில காலத்திற்கு பிறகே இந்தியா நேரடியாகப் பிரிட்டிஷ் ஆளுகைக்குக் கீழ் போனது.

கிழக்கிந்திய கம்பெனி திவால்
இந்தக் கிழக்கிந்திய கம்பெனி, 150 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படவில்லை. 21 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில், சஞ்சீவ் மேத்தா அதை மேஃபேரில் டீ, உயர்தர உணவுப் பொருட்களை விற்கும் பிராண்டாக மீண்டும் அறிமுகப்படுத்தினார். இருப்பினும், அது வெற்றிகரமாக இருக்கவில்லை. பல்வேறு பொருளாதாரச் சிக்கலில் மாட்டிய அந்த நிறுவனம் இப்போது திவாலாகியுள்ளது.
2025 அக்டோபரில் ஈஸ்ட் இந்தியா கம்பெனிக்கு € 9,50,000க்கு மேல் கடன்சுமைகள் உள்ளன. € 1,93,789 வரி பாங்கி, € 1,63,105 ஊழியர்களுக்கும் கொடுக்க வேண்டி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அந்நிறுவனம் திவாலாகியுள்ளது. அந்த நிறுவனத்தின் இணையதளமும் முறையாகச் செயலிழந்துள்ளது.
பின்னணி
2010இல் சஞ்சீவ் மேத்தா கிழக்கிந்திய நிறுவனத்தின் பெயருக்கான உரிமைகளைப் பெற்றபோது, அது பரவலான கவனத்தைப் பெற்றது. இந்தியாவின் பெரும் பகுதிகளை ஆட்சி செய்த நிறுவனத்தை இந்தியத் தொழிலதிபர் ஒருவரே சொந்தமாக்கிக்கொண்டது முக்கியத்துவமாகக் கருதப்பட்டது. சர்வதேச செய்தித்தாள்கள் இதை வரலாற்றுத் திருப்பம் என்றன. காலனித்துவ ஆட்சியாளரின் நிறுவனம், அவர்கள் ஆட்சிய செய்த நாட்டிலிருந்து வந்த ஒருவரால் கட்டுப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்க விஷயமாகப் பார்க்கப்பட்டது..
ஆடம்பரக் கடையைத் திறந்த மேத்தா, உயர்தர டீ, சாக்லேட்டுகள், மசாலா பொருட்கள், இனிப்புகள் போன்றவற்றை விற்றார். ஃபோர்ட்னம் & மேசன் போன்ற புகழ்பெற்ற பிரிட்டிஷ் சில்லறை விற்பனையாளர்களுடன் தன்னை நிலைநிறுத்த முயன்றார். இருப்பினும், பல்வேறு காரணங்களால் அது வெற்றிகரமாக அமையவில்லை.
கிழக்கிந்திய நிறுவனம்
முந்தைய அசல் கிழக்கிந்திய நிறுவனம் 1600 டிசம்பர் 31ம் தேதி ராணி முதலாம் எலிசபெத் வழங்கிய அரச சாசனம் மூலம் நிறுவப்பட்டது. இது ஒரு பொது நிறுவனமாக இருந்தது. அதாவது முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி, லாபம் பார்க்கலாம். 1612-1613 ஆண்டுகளில் சூரத் நகரில் முதல் வர்த்தக நிலையத்தை நிறுவிய இந்நிறுவனம், படிப்படியாக வர்த்தகத்தில் ஏகபோக உரிமைகளைப் பெற்றது.
18ஆம் நூற்றாண்டுக்குள் அது வர்த்தக நிறுவனத்திலிருந்து அரசியல், ராணுவ சக்தியாக மாறியது. அது இந்தியாவில் கோட்டைகளைக் கட்டியது. உள்ளூர் ஆட்சியாளர்களுடன் கூட்டணி அமைத்தது.. இந்திய ராஜ்ஜியங்களுக்கு எதிராகவே போர்களை நடத்தியது. அதாவது இந்தியாவில் வணிகம் செய்வதாக உள்ளே நுழைந்து, பிறகு ராணுவ மற்றும் அரசியல் சக்தியாக மாறி, இந்தியாவையே ஆட்சி செய்யத் தொடங்கியது.
வரலாறு காணாத பஞ்சம்
கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியில் பல சுரண்டல்கள் நடந்தன. இந்தியர்கள் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். பெரும் வங்காளப் பஞ்சம் உட்பட பல பஞ்சங்கள் ஏற்பட இது காரணமாக அமைந்தது.. பிரிட்டிஷ் ஆட்சியில் சுமார் 3 ரோடி மக்கள் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் தான் 1857இல் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் ஏற்பட்டது. அதன் பிறகே 1858இல் இந்தியாவின் நேரடிக் கட்டுப்பாட்டைப் பிரிட்டிஷ் அரசு எடுத்தது. சுமார் 101 ஆண்டுகளுக்குப் பிறகு, கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சி முடிவுக்கு வந்தது. 1874இல் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் எஞ்சிய அனைத்து அதிகாரங்களையும் தனக்கு மாற்றிக் கொண்ட நிலையில், கிழக்கிந்திய நிறுவனம் கலைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications