இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது... தாயும் சேயும் நலம்
லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் -கேரி சைமண்ட்ஸ் தம்பதிக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. இதற்கான அறிவிப்பை போரீஸின் செய்தித்தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து வரலாற்றில் முதல்முறையாக பிரதமர் பதவியில் இருந்தவாறே திருமணம் செய்துகொண்டவர் என்ற பெருமைக்கு உரியவர் போரீஸ் ஜான்சன். 55 வயதாகும் இவர் தன்னைவிட 22 வயது குறைந்த பெண்ணை காதலித்து அண்மையில் திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இது போரீஸ் ஜான்சனுக்கு மூன்றாவது திருமணம் என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் லண்டன் நேஷனல் ஹெல்த் சர்வீஸ் மருத்துவமனையில் பேறுகாலத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த கேரி சைமண்ட்ஸை போரீஸ் ஜான்சன் உடனிருந்து கவனித்து வந்தார். இந்நிலையில் அவர்களுக்கு அழகான ஆண்குழந்தை இன்று பிறந்தது. இதையடுத்து அவருக்கு பன்னாட்டு தலைவர்களிடம் இருந்து வாழ்த்துச்செய்தி வந்த வண்ணம் உள்ளன.
போரீஸ் ஜான்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது தனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தருவதாகவும், சிலிர்க்க வைக்கும் தகவல் எனவும் கூறியுள்ளார் போரீஸின் தந்தை ஸ்டான்லி. கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து மீண்டு கடந்த திங்களன்று தான் வழக்கமான அலுவல் பணிக்கு திரும்பினார் போரீஸ் ஜான்சன். மேலும், இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கடுமையான போராட்டத்திற்கு பிறகு அதிலிருந்து மீண்டெழுந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போரீஸ் ஜான்சனை பொறுத்தவரை ஏற்கனவே மணமுடித்த 2 மனைவிகள் மூலம் 4 குழந்தைகளுக்கும், மூன்றாவதாக திருமணம் செய்துகொண்ட கேரி மூலம் ஒரு குழந்தைக்கும்(மொத்தம் 5 குழந்தைகளுக்கு) தந்தையாவார். போரீஸ் ஜான்சனுக்கு குழந்தை பிறந்த செய்தி அறிந்ததும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரீசன், ஜப்பான் அதிபர் ஷின்சோ அபே ஆகிய இருவரும் முதல் ஆளாக போரீஸை தொடர்பு கொண்டு வாழ்த்துக்கூறினர்.












Click it and Unblock the Notifications