இங்கிலாந்தில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை.. தடுப்பூசி+முழு ஊரடங்கு.. சாதித்து காட்டிய போரிஸ் ஜான்சன்
லண்டன்: கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குப் பிறகு, இங்கிலாந்தில் கடந்த திங்கள்கிழமை, முழுமையாக 24 மணி நேரத்திற்கு ஒரு நபருக்குக் கூட கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.
உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனாவின் கோரதாண்டவம் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. கொரோனா பாதிப்பைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்துக் கொண்டே தான் வருகிறது.
முன்னெச்சரிக்கையுடன் சிறப்பான நடவடிக்கைகளை எடுக்கும் நாடுகளில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. சரியான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் கொரோனாவைக் கட்டுப்படுத்தலாம் என்பதையே இந்த நாடுகள் காட்டியுள்ளன.
இளைஞர்கள் தேவையின்றி வெளியே சுற்றுவதால்தான்.. கொரோனா வேகமாக பரவுகிறது.. ஐசிஎம்ஆர் புது விளக்கம்
குறையும் கொரோனா
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரிட்டன் கொரோனாவை கட்டுப்படுத்த மிகத் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரடியாக ஈடுபட்டுள்ளார். மேலும், இதற்காகச் சிறப்பு டாஸ்க் ஃபோர்ஸையும் அமைத்துள்ளார். இதன் பலன்களைப் பிரிட்டன் தற்போது அனுபவித்து வருகிறது. அங்கு கொரோனா பாதிப்பு சில வாரங்களாகவே தொடர்ந்து குறைந்து வருகிறது.
கொரோனா பாதிப்பு
கடந்த மே 10ஆம் தேதி, 24 மணி நேரத்தில், பிரிட்டனில் மொத்தம் 2,357 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. நான்கு பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்தனர். இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் பிரிட்டனின் முக்கிய பிராந்தியமான இங்கிலாந்தில் திங்கள்கிழமை ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. பிரிட்டன் நாட்டின் இதர பிராந்தியங்களிலேயே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் ஒருவருக்கும் பாதிப்பு இல்லை
அதேபோல பிரிட்டனின் பிராந்தியங்களான இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளில் உயிரிழப்புகளும் ஒருவருக்கும் உறுதி செய்யப்படவில்லை. நான்கு உயிரிழப்புகளும் வேல்ஸ் பிராந்தியத்திலேயே உறுதி செய்யப்பட்டது. பொதுமக்களின் முயற்சிகள் மற்றும் தடுப்பூசி திட்டத்தின் காரணமாக, கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் இங்கிலாந்து ஏற்படவில்லை என்று இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி தெரிவித்தார்.
இன்றும் கொரோனா இருக்கிறது
அதேநேரம் உலகின் மாபெரும் தொற்றாக உருமாறியுள்ள கொரோனா, இன்னும் நம்மைவிட்டு முழுமையாக அகலவில்லை என்பதை நாம் தெளிவாக உணர வேண்டும். இந்தத் தொற்று இன்னும் பரவிக் கொண்டுதான் இருக்கிறது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மட்டுமே ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பிரிட்டன் வகை கொரோனா
பிரிட்டன் நாட்டில் கடந்த ஆண்டு ஜூலை முதலே வைரஸ் பரவல் குறையத் தொடங்கியது. இருப்பினும், கடந்த ஆண்டின் இறுதியில் கண்டறியப்பட்ட உருமாறிய பிரிட்டன் வகை கொரோனாவால் வைரஸ் பாதிப்பு அந்நாட்டில் மிக வேகமாக அதிகரித்தது. இதனால் கிறிஸ்துமஸ் பணடிக்கைக்கு முன் அங்கு மீண்டும் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.
தடுப்பூசி + ஊரடங்கு
அதேபோல தடுப்பூசி செலுத்தும் பணிகளும் அங்குத் தீவிரப்படுத்தப்பட்டது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பிரிட்டனில் தடுப்பூசி பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி மற்றும் முறையான ஊரடங்கு ஆகியவை காரணமாகவே பிரிட்டன் நாட்டில் கொரோனா பரவல் கிட்டதட்ட முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.