சார்லஸ் முடிசூட்டு விழாவில் இந்து மதகுருக்கள்.. 900 ஆண்டு வரலாற்றில் இதுதான் முதல்முறை! ஏன் தெரியுமா
லண்டன்: பிரிட்டன் நாடே இப்போது முடிசூட்டு விழாவுக்குத் தயாராகி வரும் நிலையில், இது குறித்து சில கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
பிரிட்டன் இரண்டாம் ராணி எலிசபெத் தனது 96 வயதில் கடந்தாண்டு செப். 8ஆம் தேதி உயிரிழந்தார். பிரிட்டன் நாட்டில் நீண்ட காலம் தலைமை பொறுப்பில் இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் இவர்.
எலிசபெத் மறைவதைத் தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் பிரிட்டன் நாட்டின் மன்னர் பதவிக்கு வருகிறார். ராணி எலிசபெத் உடல்நலக்குறைவாக இருந்த போதே சார்லஸ் தான் அனைத்து பணிகளையும் கவனித்து வந்தார்.
மன்னர் சார்லஸ்: ராணி எலிசபெத் மரணத்தைத் தொடர்ந்து அவர் மன்னர் பொறுப்பிற்கு வந்தாலும் கூட அவருக்கு முடிசூட்டு விழா இன்னும் நடக்கவில்லை. அவரது முடிசூட்டு விழா வரும் மே 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் பிரிட்டனில் ஏற்கனவே பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் முடிசூட்டு விழா என்பதால் இதைக் கோலாகலமாகக் கொண்டாட ஒட்டுமொத்த பிரிட்டன் நகரமே தயாராகி வருகிறது.

"ஆப்ரேஷன் கோல்டன் ஆர்ப்" என்று பெயரில் இந்த முடிசூட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 900 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், மே 6ஆம் தேதி மே 6ஆம் தேதி லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் சார்லஸ் முடிசூட்டு விழா நடக்கிறது. இந்த விழா மொத்தம் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதனிடையே இது குறித்து இப்போது சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மிக முக்கிய மாற்றம்: வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த விழாவில் மற்ற மதத்தினரையும் இணைக்கும் வகையில் நடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் விழாவில், முஸ்லீம், இந்து, சீக்கிய மற்றும் யூத மத குருக்களும் கலந்து கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் சேர்ந்து தான் அரசருக்கு நான்கு முக்கிய முடிசூட்டு அலங்காரத்தை வழங்குவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இது மட்டும் நடந்தால், பிரிட்டன் மன்னர் முடிசூட்டுவதில் கிறிஸ்தவரல்லாத மதகுருக்கள் கலந்து கொள்ளும் முதல் நிகழ்வாக இது இருக்கும். ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் நான்கு உறுப்பினர்களுடன் முக்கிய விழாவின் ஒரு பகுதியாக இருக்கும்.. முஸ்லிம், இந்து, சீக்கிய மற்றும் யூத சமூகங்களைச் சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொள்ள உள்ளனர். அதேநேரம் அவர்கள் விழாவில் பேசவோ அல்லது ஆசீர்வாதங்களைப் படிக்கவோ மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

எதற்காக: பிரிட்டனில் பல்வேறு மதங்களைக் கொண்டவர்களின் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், அதைப் பிரதிபலிக்கும் ஒரு முயற்சியாக இது செய்யப்படுகிறது. சமீபத்தில் பிரிட்டன் நாட்டில் நடந்தக் கணக்கெடுப்பில் கூட அங்கே கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை முதல்முறை 50% கீழ் சென்றிருந்தது. இருப்பினும், சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் மற்ற மதத் தலைவர்கள் பங்கேற்பதை சர்ச் தலைவர்கள் எதிர்ப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாரம்பரியமாக ஆங்கிலிகன் விழாவாக நடத்தப்படும் நிலையில், அதில் மற்ற மதத் தலைவர்கள் பங்கேற்க இவர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இவர்கள் எதிர்ப்பையும் மீறி பிரிட்டன் மன்னர் முடிசூட்டு விழாவில் கிறிஸ்துவ மத தலைவர்களைப் போலவே மற்ற மத தலைவர்களும் பங்கேற்பார்கள் என்றே செய்திகள் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications