ChAdOx1 nCoV-19 கொரோனா தடுப்பூசியில் இரட்டை பாதுகாப்பு அம்சம்.. ஆக்ஸ்போர்டு பல்கலை. ஆய்வின் சிறப்பு
லண்டன்: கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் ஆரம்ப கட்ட வெற்றியை பெற்றுள்ளதாக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த மருந்து இரு பலன்களை வழங்கக் கூடியது என்று தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
பிரிட்டன் அரசின் உதவியுடன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம், ஆஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனம் ஆகியவை இணைந்து, இந்த தடுப்பூசியை தயாரித்து பரிசோதித்து வருகின்றது.
இந்த தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கும் 3ம் கட்ட பரிசோதனை அண்மையில் துவங்கியது.
ஆக்ஸ்போர்டு பல்கலை. கொரோனா தடுப்பூசி.. முதல்கட்ட சோதனை வெற்றி.. வெளியானது அசத்தல் அறிவிப்பு
1077 பேருக்கு தடுப்பூசி
இதன் ஆரம்ப கட்ட பரிசோதனை முடிவுகள் குறித்து இன்று தகவல் வெளியாகியுள்ளது. 1,077 பேருக்கு இந்த தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது. மேலும், கொரோனா வைரசை எதிர்த்து போரிடும் வெள்ளை அணுக்களையும் உற்பத்தி செய்கிறது.
பணிகள் உள்ளன
ஆக்ஸ்போர்ட் பேராசிரியர் சாரா கில்பர்ட் கூறுகையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த எங்கள் தடுப்பூசி உதவுமா என்பதை உறுதிப்படுத்துவதற்கு இன்னும் நிறைய பணிகள் உள்ளன. இருப்பினும், இந்த ஆரம்ப முடிவுகள் நமக்கு நம்பகத்தன்மையை அளித்துள்ளன என்று கூறினார்.
இரு நன்மைகள்
உலகம் முழுக்க 140 நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அதில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி முக்கியமானது. வித்தியாசமானது. இதற்கு காரணம், இந்த தடுப்பூசியின் இரட்டைப் பாதுகாப்பு அம்சங்கள்தான். இந்த ஊசிமருந்தைச் செலுத்தும் போது , உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆன்ட்டி-பாடிக்கள் அதிகரிக்கிறது. மேலும், மனித உடலில் வைரஸை உருவாக்கும் செல்களை அழிக்கும் திறமை கொண்ட கில்லர் டி-செல்களையும் உருவாக்குகிறது.
பக்க விளைவு இல்லை
ChAdOx1 nCoV-19 என்பது, இந்தத் தடுப்பூசியின் பெயர். இதை பரிசோத்து பார்த்தபோது, தலைவலி உள்ளிட்ட சாதாரண சில அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இது சில தடுப்பூசிகளுக்கு ஏற்படக் கூடிய பக்க விளைவுதான். ஆனால் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆக்ஸ்போர்டு ஆய்வு நல்ல ரிசல்ட்டை காட்டுவதை அறிந்து, இந்த தடுப்பூசியை 100 மில்லியன் செலவிட்டு வாங்குவதற்கு பிரிட்டன் உத்தரவிட்டுள்ளது. இந்த தடுப்பூசியினால் பெரிய அளவில் மனித உடலில் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.