ChatGPT-க்கு கோயில் கட்டி கும்பிடும் மாணவர்கள்! வேற லெவல் சம்பவம்! மறுபுறம் எச்சரிக்கும் ஆசிரியர்கள்
ChatGPTஐ கொண்டாடி தீர்க்கும் மாணவர்கள் என்ன காரணம் என்பதை விளக்கமாகப் பார்க்கலாம்.
லண்டன்: உலகில் இப்போது பேசுபொருளாக மாறியுள்ள ChatGPTஐ மாணவர்கள் கோயில் கட்டி கும்பிடாத அளவுக்குப் பாராட்டித் தள்ளி வருகின்றனர். அது ஏன் மாணவர்களுக்கு அப்படி என்ன உதவுகிறது என்பதைப் பார்க்கலாம்.
கடந்த சில வாரங்களாகவே ஒட்டுமொத்த இணைய உலகமே ChatGPT குறித்துத் தான் பேசிக் கொண்டிருக்கிறது. இப்போது இணையத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் செயலிகளில் சாட் ஜிபிடி டாப் இடத்தில் உள்ளது.
நாம் கேட்டும் கேள்விகளுக்குத் துல்லியமாகப் பதிலளிப்பது மட்டுமில்லாமல்.. ஜோக் சொல்வது கவிதை எழுதுவது என அனைத்தையுமே பக்காவாக செய்கிறது இந்த சாட் ஜிபிடி.. வரும் காலத்தில் நிச்சயம் இது இணைய உலகில் பெரும் புயலை ஏற்படுத்தும்.

சாட் ஜிபிடி
சாட் ஜிபிடி என்பது ஏஐ கருவியாகும்.. இதற்கு முன்பு பல ஏஐ கருவிகள் வந்திருந்தாலும் சாட் ஜிபிடி மற்றவற்றைக் காட்டிலும் அதிக வலிமையான ஒன்றாக உள்ளது. இதனால் வேலையிழப்பு அபாயம் உள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட இந்த ஏஐ கருவியைப் பலரும் பல விதமாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.. குறிப்பாக இது மாணவர்களுக்குப் பேருதவியாக இருக்கிறதாம். இதனை மாணவர்கள் கோயில் கட்டாத குறையாகக் கும்பிட்டு வருகிறார்கள். அப்படியொரு சம்பவத்தைத் தான் மாணவர் ஒருவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

கல்லூரி மாணவர்கள்
கல்லூரிகளில் பொதுவாக மாணவர்களுக்குக் குறிப்பிட்ட பாடத்தில் கட்டுரை எழுதச் சொல்வார்கள்.. ஒரு தலைப்பில் விரிவான கட்டுரை எழுதப் பல மணி நேரம் படிக்க வேண்டி இருக்கும்.. இரவு முழுக்க கண் விழித்து ஆய்வு செய்ய வேண்டி இருக்கும். இணையம் வரும் முன்பு 500 வார்த்தைகளைக் கொண்ட ஒரு கட்டுரையை எழுதவே நூலகத்தில் பல மணி நேரம் வரை செலவிட வேண்டி இருக்கும். ஆனால், இணையம் வந்த பிறகு.. அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் கிடைத்தால் விரிவான கட்டுரையைக் குறைந்த நேரத்தில் எழுத முடிந்தது. இதுபோன்ற கட்டுரைகள் மானவர்களின் அறிவுத்திறனைக் கண்டறிய ஆசிரியர்களுக்குப் பெரியளவில் உதவும்.

மாற்றிவிட்டது
ஆனால், இந்த சாட் ஜிபிடி இவை அனைத்தையும் மாற்றிவிட்டது. நமக்கு என்ன தலைப்பில் எது போன்ற கட்டுரை வேண்டும் என்று சொல்லிவிட்டால்.. எத்தனை வார்த்தைகளில் கேட்கிறோமோ.. அத்தனை வார்த்தைகளில் பக்காவாக கட்டுரையையே கொடுத்துவிடுகிறது இந்த சாட் ஜிபிடி.. சாட் ஜிபிடியை வைத்துக் கொண்டு மாணவர்கள் மிக எளிதாகச் சிக்கலான தலைப்புகளிலும் கூட விரிவான கட்டுரைகளை எழுதிவிடுகிறார்கள். பிரிட்டனில் அப்படியொரு சம்பவம் தான் நடந்துள்ளது. பீட்டர் என்பவர் அப்படிதான் சாட் ஜிபிடி கட்டுரையைக் கொடுத்த எக்சாமில் பாஸ் ஆகிவிட்டார் பீட்டர்.

பிரிட்டன் பீட்டர்
பீட்டருக்கு ஏஐ கருவிகள் மீது ஆர்வம் அதிகமாம். கடந்த சில காலமாகவே ஏஐ கருவிகளை இவர் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.. இதைத் தனது கல்லூரி படிப்பிற்குப் பயன்படுத்த முடிவு செய்த பீட்டர்.. தனது பல்கலைக்கழக ஆசிரியரிடம் சென்று தான் இறுதி தேர்வுக்கு ரெடியாகிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சமூக கொள்கை குறித்து ஒரு கட்டுரையை எழுதச் சொல்லியுள்ளனர். ஓகே என ஜாலியாக வீட்டிற்கு வந்த பீட்டர், புத்தகங்களைப் படிக்காமல் ஏஐ உதவியுடன் இந்த கட்டுரை எழுதிவிட்டார்.

வெறும் 20 நிமிடங்கள்
சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள்... பல மணி நேரம் தேவைப்படும் இந்த கட்டுரையை சாட் ஜிபிடி வெறும் 20 நிமிடங்களில் முடித்துவிட்டதாம். அதை ஆசிரியரிடம் சென்று சமர்ப்பித்துள்ளார் பீட்டார். இறுதி மதிப்பெண் சமீபத்தில் வெளியான நிலையில் 53 மார்க் பெற்று பாஸ் ஆகியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "உங்களால் ஏஐ துணையுடன் நிச்சயம் முதல் வகுப்பு மார்க் பெற முடியாது. ஆனால், நிச்சயம் 50% மார்க் மேல் பெற்று பாஸ் ஆகிவிட முடியும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

எச்சரிக்கை
மிகப் பெரிய கட்டுரை எழுத அது உடனே எழுதித் தரவில்லை.. அது சிறிய பதில்களை மட்டுமே கொடுத்ததால்.. தனித்தனியாக 10 கேள்விகளைக் கேட்டு சாட் ஜிபிடியிடம் இருந்து பதிலைப் பெற்றுள்ளார். அதன் பின்னர், இவரே கிடைத்த அனைத்து பதில்களையும் தொகுத்து ஒரே கட்டுரையாகக் கொடுத்துள்ளார். அனைத்து வேலையும் 20 நிமிடங்களில் முடிந்துவிட்டதாகவும் ஏஐ கருவி இந்தளவுக்குக் கட்டுரை எழுதும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இதுபோல அனைத்திற்கும் மாணவர்கள் ஏஐ பக்கம் திரும்புவது மாணவர்கள் கற்றல் திறனைப் பாதிக்கும் என்று ஆசிரியர்களும் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications