அப்படியே நிஜத்தில் நடந்த "கோமாளி" கதை.. கொரோனான்னா என்னது? கோமாவிலிருந்து எழுந்து கேட்ட ஜோசப்!
லண்டன்: பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படத்தை பலரும் பார்த்திருப்பீர்கள். பல வருடங்களாக கோமாவில் இருந்து எழுதும்போது, சுற்றி உலகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதை பார்த்து அவர் வியந்து போவார்.
ஹீரோ கோமாவில் இருக்கும் போது கொசு கடித்தால் கூட எந்த உணர்வும் இல்லாமல் இருந்திருப்பார். கற்பனையில் பார்க்கும்போது இது சுவாரசியமாக இருந்தது.
ஒரு 90ஸ் கிட், 2கே கிட்ஸ் வாழ்க்கை முறையை பார்க்கும்போது அவருக்கு ஏற்படக் கூடிய அனுபவங்களும், கஷ்டங்களும் சில சுவாரசியங்களும் இந்த படத்தின் மிகப்பெரிய ஹைலைட். அதனால்தான் படம் அதிரிபுதிரி ஹிட் அடித்தது.

தொடர் சிகிச்சை
ஆனால் உண்மையிலேயே இப்படி ஒரு சம்பவம் இங்கிலாந்து நாட்டில் நடந்துள்ளது. பிரிட்டனின், ஸ்டாஃபோர்ட்ஷையரைச் சேர்ந்தவர் ஜோசப் ஃப்ளாவில். வயது 19. கடந்த வருடம் மார்ச் 1ம் தேதி ஒரு கார் விபத்தில் சிக்கி மூளையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தொடர்ந்து சிகிச்சையில் வைக்கப்பட்டார்.

லாக்டவுனுக்கு முன்பு கோமா
தொடர்ந்து அவர் சுயநினைவு இன்றி, கோமா நிலையில் இருந்து வந்துள்ளார். இங்கிலாந்தில் முழு லாக் டவுன் நடைமுறைப்படுத்துவதற்கு சரியாக மூன்று வாரங்கள் முன்பாக ஜோசப் கோமா நிலைக்குப் போய்விட்டார். எனவே கொரோனா வைரஸ் உலகில் கோரத்தாண்டவம் ஆடிய நாட்களில் அவருக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை.

11 மாதங்களில் குணமடைந்தார்
அவ்வளவு ஏன், சில கால கட்டத்தில் இரண்டு முறை அவரே கொரோனாவால், பாதிக்கப்பட்டு குணம் அடைந்தார். படுக்கையில் இருந்தபடியே அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது. 11 மாதங்களுக்கு பிறகு தற்போது சுயநினைவுக்கு திரும்பியுள்ளார் ஜோசப்.

உலகம் தலைகீழாகிவிட்டதே
"இங்கே என்ன நடந்தது" என்று சினிமா பாணியில் மயக்கம் தெளிந்து எழும் கதாபாத்திரம் போல ஜோசப் கேட்க.. முழு விவரத்தையும் விளக்கியுள்ளனர் குடும்பத்தினர். வெறும் 11 மாதம். அதற்குள் உலகம் இப்படி தலைகீழாக மாறிவிட்டதே என்று ஆச்சரியத்தில் வியந்து போய் உள்ளார் ஜோசப்.

ஆச்சரியம்
கோமாளி திரைப்படத்தில் 90ஸ்களின் வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்ட வாலிபர் 2000மாவது ஆண்டு களுக்குப் பிறகு நாடு மாறியதைப் பார்த்து வியந்து போவார். ஆனால், 2கே கிட்ஸ்சாக இருந்த ஜோசப், எழுந்து பார்த்தபோது உலகம் பின்னோக்கிப் போய் இருப்பதை பார்த்துள்ளார். இரண்டுமே எதிரெதிர் திசை பயணம். ஆனால் ஒரே மாதிரி அனுபவம் நிகழ்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications