இந்தியாவுக்கு அனுப்பாதீங்க ப்ளீஸ்.. இறுதி முயற்சியாக உள்துறை செயலருக்கு கோரிக்கை விடுத்த மல்லையா
லண்டன்: கிங்பிஷர் புகழ் விஜய் மல்லையா பிரிட்டன் நாட்டில் தொடர்ந்து தங்க, அந்நாட்டின் உள் துறைச் செயலர் ப்ரீத்தி பட்டேலிடும் புகலிட கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிலுள்ள பல்வேறு வங்கிகளிலும் சுமார் ரூ. 9 ஆயிரம் கோடி கடன் பெற்று, அதனைத் திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்தார் கிங்பிஷர் புகழ் விஜய் மல்லையா. கடனை திருப்பி செலுத்த முடியாததால், கைதுக்கு பயந்து, பிரிட்டன் நாட்டிற்குத் தப்பிச் சென்றார்.
தற்போது அவர் லண்டனில் வசித்து வருகிறார். மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை, இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று மத்திய அரசு லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
நாடு கடத்த உத்தரவு
லண்டன் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்த உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக, விஜய் மல்லையா தரப்பில் தாக்கல் செய்த அனைத்து மேல்முறையீடுகளிலும் தோல்வி அடைந்தார். இதனால் அவர் கடந்தாண்டே இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
நாடு கடத்தப்படவில்லை
இருப்பினும், நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்க மல்லையாவுக்கு இறுதியாக ஒரு வாய்ப்பு இருப்பதாகவும் இதன் காரணமாகவே அவர் தற்போது வரை நாடு கடத்தப்படவில்லை என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர். இந்தியாவுக்குத் திரும்பினால் மல்லையா கைது செய்யப்படுவது உறுதி, இதனால் தொடர்ந்து பிரிட்டனிலேயே இருக்க அவர் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார்.
புகலிட விண்ணப்பம்
இந்நிலையில், மல்லையா தனது இறுதி வாய்ப்பாகத் தொடர்ந்து பிரிட்டன் நாட்டிலேயே தங்க அந்நாட்டின் உள் துறைச் செயலர் ப்ரீத்தி பட்டேலிடம் புகழிடம் கோரி விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திலும் புகலிட விண்ணப்பம் ஒன்று நிலுவையில் உள்ளது. இருப்பினும், அது விஜய் மல்லையாவின் விண்ணப்பமா என்ற கேள்விக்கு அமைச்சகம் எவ்வித பதிலையும் அளிக்கவில்லை.
என்ன நடக்கும்
இந்த புகலிட விண்ணப்பத்தை அவர் எப்போது விண்ணப்பித்தார் என்பதுதான் மிகவும் முக்கியமானது. இது குறித்து அந்நாட்டின் சட்ட வல்லுநர்கள் கூறுகையில், "மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது. அதற்கு முன்னரே இதை விண்ணப்பித்திருந்தால், அது சரியாக இருந்திருக்கும். ஆனால், நாடு கடத்தப்படும் உத்தரவுக்குப் பின்னர், அவர் இதை விண்ணப்பித்திருந்தால், அது சட்ட ரீதியாகச் செல்லுபடி ஆகாமல் போக அதிக வாய்ப்புகள் உள்ளது" என்றனர்.