உலகம் எத நோக்கி போகுதுனே தெரியலயே! 5 வயது சிறுமியை சிதைத்த 13 வயது சிறுவன்! அதென்ன டோலி இன்காபாக்ஸ்?
லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலத்தில் தன் வீட்டருகே வசிக்கும் 5 வயது சிறுமியை 13 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களில் குறிப்பாக ராஜஸ்தான், உத்திரபிரதேசம், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகமாகி வருகிறது.
குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு இதுபோன்ற கொடூர நிகழ்வுகள் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது எவ்வளவோ முயன்றும் இது போன்ற நிகழ்வுகளைத் தடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமை
தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையின் படி," இந்தியாவில் 2020ஆம் ஆண்டை காட்டிலும், 2021ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 46% அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கடந்த 2020 ஆண்டில், ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை 13,618 குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடந்துள்ளது. அதேபோல், 2021ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை பெண்களுக்கு எதிராக 19,953 குற்றங்கள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

உபியில் அதிகம்
மாநில வாரியாகப் பார்த்தால் அதிக குற்றங்கள் பதிவாகும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடத்திலும், டெல்லி இரண்டாவது இடத்திலும் உள்ளது. 2021ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தில் 8 மாதங்களில் மட்டும் 10,084 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இரண்டாவது இடத்தில் இருக்கும் டெல்லியில் 2,147 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, ஹரியானாவில் 995 குற்றங்களும், மகாராஷ்டிராவில் 974 குற்றங்களும், கர்நாடகாவில் 467 குற்றங்களும் பதிவாகியுள்ளன.

போலீசார் அதிர்ச்சி
இந்நிலையில் போலீசாரையே திணற வைக்கும் சம்பவம் ஒன்று தற்போது உத்திரப் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. அதாவது தன் வீட்டருகே வசிக்கும் 5 வயது சிறுமியை 13 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் தான் அங்கு பேசுபொருளாக மாறியிருக்கிறது. கடதாம் காவல் நிலையப் பகுதியில் வசிக்கும் ஐந்து வயது சிறுமி மே 12ஆம் தேதி அவரது உறவினரான 13 வயது உறவினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

5 வயது சிறுமி வன்கொடுமை
முதலில் உடல் ரீதியான வன்முறை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், வியாழக்கிழமை சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். அதன் அடிப்படையில் இந்த வழக்கில் போலீஸார் முதற்கட்ட விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு, சிறுவன் மீது கற்பழிப்பு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். பலாத்கார வழக்கு எஃப்ஐஆர் மீதான முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு குழந்தைகள் நல காவல் அதிகாரி அந்த சிறுவன் குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக கௌசாம்பியின் காவல் கண்காணிப்பாளர் ஹேம்ராஜ் மீனா தெரிவித்துள்ளார்.

டோலி இன்காபாக்ஸ் என்றால் என்ன?
அதே நேரத்தில் இந்த வழக்கில் பல சுவாரசியான தகவல்களும் கிடைத்துள்ளன. அதாவது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 82ன் படி ஏழு வயதுக்குட்பட்ட குழந்தையால் செய்யப்படும் எதுவும் குற்றமாக கருதப்படுவது இல்லை இதனை "டோலி இன்காபாக்ஸ்" என அழைக்கப்படுகிறது. மேலும் ஐபிசியின் 83வது பிரிவின் படி, ஏழு வயதுக்கு மேற்பட்ட மற்றும் பன்னிரெண்டு வயதுக்குட்பட்ட குழந்தையால் நடக்கும் குற்றங்கள் எதுவும் குற்றம் இல்லை என கூறப்படுகிறது. ஆனால் இந்த வழக்கில் சிறுவன் 13 வயதை அடைந்துள்ளதால் அவர் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications