நேற்று பீகார்,இன்று உத்தர பிரதேசம்.. கங்கையில் தொடர்ந்து கரையொதுங்கும் சடலங்கள்..கொரோனாவின் கோரமுகம்
லக்னோ: நேற்று பீகாரில் கங்கை நதிக்கரையில் சடலங்கள் கரையொதுங்கிய நிலையில் இன்று அதேபோல உத்தரப் பிரதேசத்திலும் சடலங்கள் கரையொதுங்கியுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல நாட்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் மூன்று லட்சத்தைக் கடந்தே பதிவாகியுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் சுமார் 26 மாநிலங்களில் ஏதோ ஒரு வகையிலான ஊரடங்கு அல்லது லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கரையொதுங்கிய சடலங்கள்
இருப்பினும், பல மாநிலங்களிலும் கொரோனா தனது கோர முகத்தைக் காட்டிக் கொண்டு தான் இருக்கிறது. நேற்று பீகார் மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள சவுசா என்ற ஊரில் கங்கை நதிக்கரையில் 40க்கும் மேற்பட்ட சடலங்கள் அழுகிய நிலையில் கரை ஒதுங்கின. இவை உத்தரப் பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் என்றும் தகனம் செய்யப் பணமில்லாமல் அவை கங்கையில் வீசப்படுவதாகவும் பீகார் மக்கள் தெரிவித்தனர்.

நேற்று பீகார் இன்று உபி
இந்நிலையில், இன்று உத்தரப் பிரதேசத்தின் காசிப்பூர் மாவட்டத்திலும் இதேபோல பல சடலங்கள் கரையொதுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து காசிப்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் எம் பி சிங் கூறுகையில், இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு அதிகாரிகளை அனுப்பியுள்ளோம். இது பற்றி விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. எந்த ஊரில் இதுபோல சடலங்கள் நதியில் வீசப்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்க முயல்கிறோம் என அவர் தெரிவித்தார்.

காரணம் என்ன
சமீப நாட்களாக இப்படி நதியில் சடலங்களைக் காண்பது வாடிக்கையான ஒரு நிகழ்வாக மாறிவிட்டதாக காசிப்பூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்து மத வழக்கத்தின்படி உயிரிழந்த ஒருவரது உடலை எரிக்க வேண்டும். ஆனால் தினசரி பல உடல்களை எரிக்க வேண்டியுள்ளதால், மயானங்களில் கூட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விறகுகளுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுவதால் உறவினர்கள் இப்படி கங்கை நதியில் சடலங்களை சிலர் வீசி செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எங்கிருந்து வீசப்படுகிறது
இருப்பினும், இந்த உடல்கள் பீகாரிலிருந்து கங்கையில் வீசப்படுகிறதா அல்லது உத்தரப் பிரதேசத்திலிருந்து வீசப்படுகிறதா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை. ஆனால், பெரும்பாலான மக்களும் உள்ளூர் அதிகாரிகளும் உத்தரப் பிரதேசத்தில் இருந்தே உடல்கள் வீசப்பட்டிருக்கும் எனக் குற்றஞ்சாட்டுகின்றனர். இங்குக் கங்கை நதி தான் பீகாரையும் உத்தரப் பிரதேசத்தையும் பிரிக்கிறது. ஒரு புறம் உத்தரப் பிரதேசத்தில் காசிப்பூரின் கிராமங்களும் மறுபுறம் பீகாரின் கிரமங்களும் உள்ளன.

கொரோனா சடலங்களா?
இதனால் எந்த மாநிலத்தில் இருந்து உடல்கள் இப்படி ஆற்றில் வீசிப்பட்டிருக்கும் என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை. அதேநேரம் இவை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களாக வாய்ப்பு குறைவு என மாவட்ட மாஜிஸ்திரேட் ஞானேஷ்வர் திரிபாதி தெரிவித்துள்ளார். நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் பாரம்பரிய முறையில் கட்டப்பட்டிருந்ததாகவும் கொரோனாவால் பலியானவர்களை அப்படிக் கட்டமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

யமுனை நதியிலும்
முன்னதாக கடந்த மே 6ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்திலுள்ள யமுனை நதியிலும் இதேபோல ஐந்துக்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்து செல்வதை உள்ளூர் மக்கள் பார்த்துள்ளனர். இது போன்ற சடலங்களால் எங்கு தங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சமும் உள்ளூர் மக்களுக்கு அதிகரித்து வருகிறது. இந்த சடலங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனாவின் கோர முகம்
இந்தியாவில் தற்போது தினசரி உயிரிழப்புகளும் மூவாயிரத்தை கடந்துள்ளது. இருப்பினும், பல நூறு கொரோனா உயிரிழப்புகள் தினசரி கொரோனா அல்லாத மரணங்களாக மறைக்கப்படுவதாகப் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் நாட்டில் கொரோனாவின் கோரம் எந்தளவு மோசமாக உள்ளது என்பதை விளக்கும் வகையில் இந்த நிகழ்வுகள் அமைந்துள்ளன.












Click it and Unblock the Notifications