பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினராக மாற்றப்படுவார்கள்! மத மாற்ற வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் கருத்து
லக்னோ: நமது நாட்டில் கட்டாய மதமாற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதற்கிடையே மதமாற்றம் தொடர்பான வழக்கில், மதமாற்ற நிகழ்வுகள் தொடர நாம் அனுமதித்தால் நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒரு நாள் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள் என்றும் அலகாபாத் ஐகோர்ட் தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற நிகழ்வுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்தியா மதச் சார்பற்ற நாடு. இங்கே பொதுமக்கள் எல்லா மதங்களைப் பின்பற்றவும் உரிமை இருக்கிறது. மேலும், ஒருவர் தனது மதத்தைப் பிரச்சாரம் செய்யும் உரிமையையும் சட்டமே வழங்குகிறது.

சிறுபான்மையினராக மாற்றிவிடுவார்கள்: ஆனால், ஏழை மக்களைத் தவறாக வழிநடத்தி மதமாற்றம் செய்யும் நிகழ்வுகள் தொடர்கதையாகி வருவதாக ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள். இதற்கிடையே மத மாற்றங்கள் குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. மத மாற்றங்கள் நிகழ்வுகள் நாட்டில் தொடர்ந்தால், நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒரு நாள் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் இருந்து இந்துக்களைக் கட்டாயப்படுத்தி கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீன் கோரி அலகாபாத் ஹைகோர்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்த அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் இந்த கருத்துகளைத் தெரிவித்தார்.
சட்டங்கள் தேவை: இது தொடர்பாக நீதிபதி மேலும் கூறுகையில், "இந்த போக்கை அனுமதித்தால், இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒரு நாள் சிறுபான்மையினராக இருப்பார்கள்.. மேலும் மதமாற்றம் செய்ய நடக்கும் கூட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்" என்றார். மேலும், மதமாற்றம் தொடர்பாக நடக்கும் கூட்டங்களுக்கு உடனடியாகத் தடை விதிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.. இது போன்ற நடவடிக்கைகள் அரசியலமைப்பின் 25வது பிரிவில் கூறப்பட்டுள்ள மத சுதந்திரத்திற்கு எதிராக இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி மேலும் கூறுகையில், "ஒரு மதத்தைப் பிரச்சாரம் செய்யச் சட்டம் அனுமதிக்கிறது தான்.. ஆனால்,
பிரசாரம் என்பது மதத்தை வளர்ப்பதற்காக மட்டுமே.. எந்த ஒரு நபரையும் அவரது மதத்தில் இருந்து மற்ற மதத்திற்கு மாற்ற இல்லை.. உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டு கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்ட நிகழ்வுகள் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இது மிகவும் தீவிரமான விஷயம்" என்று கூறிய நீதிபதி ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்தார்.
என்ன வழக்கு: உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கைலாஷ் என்பவருக்கு எதிராகப் புகார் அளித்திருந்தார். கைலாஷ் தனது மனநல பாதிக்கப்பட்ட சகோதரரைச் சிகிச்சைக்கு எனக் கூறி டெல்லி அழைத்து வந்து மதம் மாற்றம் செய்துவிட்டதாகவும் தங்கள் கிராமத்திலும் பலருக்கும் மதமாற்றம் செய்து வைப்பதாகவும் புகார் அளித்தார். மதம் மாறினால் பணம் தருவதாகக் கூறி, அப்பாவி மக்களை மதம் மாற்றி வருகிறார் என்பதே புகாராகும்.
இந்த வழக்கில் கைலாஷ் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கில் தான் அலகாபாத் நீதிமன்றம் மத மாற்ற நிகழ்வுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கருத்து கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications