100 எம்எல்ஏக்களை தூக்கி.. ஆட்சியை அமையுங்கள்! அகிலேஷ் யாதவ் கொடுத்த ஆஃபர்.. கவிழும் யோகி அரசு?
லக்னோ: உத்தரப் பிரதேச பாஜகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், 100 எம்எல்ஏக்களை கொண்டு வந்து ஆட்சி அமைக்கவும் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ட்வீட் செய்துள்ளது பேசுபொருள் ஆகியுள்ளது. அவரது இந்த ஒரு ட்வீட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் சொல்ல வருவது என்ன.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இப்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இருப்பினும், கடந்த லோக்சபா தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் பாஜகவைக் காட்டிலும் இந்தியா கூட்டணியே அதிக சீட்களில் வென்றது.

அந்த ஒரு ட்வீட்: இதையடுத்து உத்தரப் பிரதேச பாஜகவில் உட்கட்சி மோதல் நிலவுவதாகப் பரவும் செய்திகள் அதிகரித்தன. இதற்கிடையே சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் செய்துள்ள ஒரே ஒரு ட்வீட் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. எம்எல்ஏக்கள் அணி மாறி ஆட்சி அமைக்க வலியுறுத்துவது போல அவர் ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் இந்தியில், "பருவமழை சீசன் சலுகை: 100 எம்எல்ஏக்களை கொண்டு வந்து ஆட்சியை அமையுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
அகிலேஷ் யாதவ் தனது ட்வீட்டில் யாரையும் குறிப்பிடவில்லை.. எந்த கட்சி அல்லது எந்த மாநிலம் என்பதைக் கூட அவர் தனது ட்வீட்டில் குறிப்பிடவில்லை. இருப்பினும், முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது அதிருப்தியில் உள்ள பாஜகவில் உள்ளவர்களுக்கான செய்தி இது என்று இந்த விவகாரத்தில் விவரம் அறிந்த சமாஜ்வாதி தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆட்சி மாறும்: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "2022 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி 111 இடங்களை வென்றது, மேலும் 100 அதிருப்தி பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்றால், நாங்கள் எளிதாக ஆட்சி அமைப்போம்" என்று அவர் தெரிவித்தார்.
உட்கட்சி மோதல்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவில் கடுமையான உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. அரசை விடக் கட்சி பெரியது என்று அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கூறியதே மோதலை வெளிச்சம் போட்டு காட்டியது. மேலும், அனைத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முதலில் கட்சி தொண்டர்களை மதிக்க வேண்டும் என்றும் மவுரியா கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து மவுரியா கடந்த செவ்வாய்க்கிழமை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை டெல்லியில் சந்தித்தார்.. ஆனால் இது தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கும் மவுரியாவுக்கும் இடையே மோதல் இருப்பதாக நீண்ட காலமாகவே கூறப்படும் நிலையில், இந்த தகவல்கள் அதை உறுதி செய்வதாகவே இருக்கிறது.
அதிருப்தி: அதேபோல லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த பலரும் யோகி மீது அதிருப்தியில் உள்ளனராம். அவர்களுடன் தனிப்பட்ட முறையில் உரையாடும் போது முதல்வர் யோகியின் ஸ்டைலில் அவர்கள் அதிருப்தி வெளிப்படுத்துகின்றனர். தங்கள் தோல்விக்கு முதல்வரே காரணம் என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச தேர்தல்: உத்தரப் பிரதேசத்தில் அடுத்து 2027இல் தான் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கு முன்பு 2022இல் நடந்த தேர்தலில் அங்கு மொத்தமுள்ள 403 சீட்களில் 255இல் வென்று பாஜக ஆட்சியைத் தக்க வைத்தது. அதேநேரம் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 111 இடங்களை மட்டுமே வென்றது.
இருப்பினும், லோக்சாபா தேர்தல் முடிவுகள் நேர் மாறாகவே இருந்தது. அங்கு மொத்தம் 80 சீட்கள் இருக்கும் நிலையில், இந்தியா கூட்டணி 43 சீட்களில் வென்றது. பாஜகவின் என்டிஏ கூட்டணி 26 சீட்களில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications