தலையை கல்லால் தாக்கி, முகத்தை கொடூரமாக சிதைத்து உ.பி.யில் மற்றொரு சிறுமி படுகொலை
லக்னோ: ஹத்ராஸில் இளம் பெண் பாலியல் பலாத்காரத்தால் பலியான சம்பவத்தால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள அதிர்ச்சி அடங்குவதற்கு முன்னர் உத்தரபிரதேசத்தில் மற்றொரு சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் படோஹி மாவட்டத்தில் 14 வயது தலித் சிறுமி வியாழக்கிழமை இறந்து கிடந்தார், அவரது தலையை கற்களால் தாக்கப்பட்டு, முகம் சிதைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: உத்தரப்பிரதேசத்தின் படோஹி மாவட்டம் கோபிகஞ்ச் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த சக்ராஜரம் திவாரிப்பூர் கிராமத்தில் வசிக்கும் சிறுமி, இயற்கை உபாதை கழிக்க அருகிலுள்ள வயலுக்குச் சென்றிருக்கிறார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர்.
திடீர் திருப்பம்.. "தலித் பெண் பலாத்காரமே செய்யப்படல".. ஏடிஜிபி ஷாக் தகவல்..உபியில் எகிறும் பரபரப்பு
குடும்பத்தினர் புகார்
பாலியல் வன்கொடுமைக்கு பின்னர் தங்கள் மகள் கொல்லப்பட்டதாக சிறுமியின் குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகுதான் பலாத்காரத்தை உறுதிப்படுத்த முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணை
இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். தடயவியல் வல்லுநர்கள் மற்றும் குற்றப்பிரிவு அதிகாரிகள் குழுவும் கிராமத்திற்கு சென்று கொலை எப்படி நடந்தது. யார் செய்தார்கள் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
கொலைக்கான காரணம்
ஊடகங்களுடன் பேசிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராம் பதான் சிங் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை கோணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தார்.
"சிறுமிக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததா இல்லையா என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகுதான் தெரியவரும்" என்று எஸ்பி படோஹி கூறினார்.
உ.பியில் பரபரப்பு
இதனிடையே உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் 4 பேர் கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்ப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் பெண், பலாத்காரமே செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.