சி.ஏ.ஏ. வன்முறை: 28 பேருக்கு ரூ15 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு உ.பி. அரசு அதிரடி நோட்டீஸ்
லக்னோ: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களின் போது பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக கூறி 28 பேரிடம் ரூ15 லட்சம் நஷ்ட ஈடு கோரி உத்தரப்பிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையாக வெடித்தன. இதனால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் உயிரிழந்தனர்.
பல இடங்களில் பேருந்துகள், போலீஸ் வாகனங்கள், போலீஸ் தடுப்புகள் உள்ளிட்டவையும் எரிக்கப்பட்டன. இது தொடர்பாக எற்கனவே கருத்து தெரிவித்திருந்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தக்க பதிலடி தருவோம் என தெரிவித்திருந்தார்.
இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டோர் உள்ளிட்ட 28 பேருக்கு உ,பி. அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நடுவீட்டில் 4 மாதமாக கிடந்த எலும்புக்கூடு... கரிக்கட்டை சடலம்.. நடந்தது என்ன.. பரபர பின்னணி!
அதில், பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியதால் ரூ14.86 லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவிகள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இது தொடர்பாக நோட்டீஸ் பெறப்பட்டுள்ளோரின் உறவினர்கள் கூறுகையில், அன்றாட கூலி வேலை செய்பவர்கள்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஜாமீனில் எடுப்பதற்கு வழக்கறிஞருக்கு தருவதற்கு கூட பணம் இல்லாத நிலையில் அரசு கேட்கும் தொகையை எப்படி செலுத்துவது? என குமுறி உள்ளனர்.