அயோத்தி ராமர் கோயில்.. கடவுள் பெயரை சொல்லி காணிக்கை மோசடி! 8 பேர் அதிரடி கைது
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளைக்கு பக்தர்கள் வழங்கிய காணிக்கை பணத்தை கையாடல் செய்த புகாரில், ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராயின் தனிப்பட்ட ஓட்டுநர் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த மோசடி தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணை நடத்தி வந்தது. இதில் ராம் சங்கர் யாதவ், ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி சுபாஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த 6 முகவர்கள் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடமிருந்து சுமார் 80 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் சில வெளிநாட்டு கரன்சிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். காணிக்கை எண்ணும் அறையில் சிசிடிவி காட்சிகளை முறையாகப் பராமரிக்காதது இந்த முறைகேடுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அதாவது சிசிடிவி புட்டேஜ், 180 நாட்களுக்குப் பதிலாக 45 நாட்கள் மட்டுமே சேமிக்கப்பட்டது. எனவே இதை பயன்படுத்தி காணிக்கை பணம் அபேஸ் செய்யப்பட்டிருக்கிறது.
அதேபோல, ஊழியர்களை முறையாக சோதனை செய்யாதது போன்ற பல பாதுகாப்பு விதிமீறல்கள் நடந்திருப்பதாக SIT அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
சம்பத் ராயின் ஓட்டுநராக இருந்த யாதவ், விதிகளுக்குப் புறம்பாக பல காணிக்கை உண்டியல் சாவிகளைத் தன் வசம் வைத்திருந்ததாகவும், அதன் மூலம் பணத்தைத் திருடியதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஊழல் புகார் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் மற்றும் உறுப்பினர் அனில் மிஸ்ரா ஆகியோர் தார்மீக அடிப்படையில் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் அயோத்தி ராமர் கோயில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மக்களின் நம்பிக்கையுடன் விளையாடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
ஊரு, உலகம் நல்லாயிருக்கணும் வேண்டிக்கதான் கோயிலுக்கு வறோம். ஆனா.. இங்க சாமியின் காணிக்கைக்கே உரிய பாதுகாப்பு இல்லையே! என்று பக்தர்கள் அதிருப்தியடைந்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications