பாஜகவுக்கு இது இனிமே ராமர் பூமியில்ல.. ஜாட் பூமி.. உத்தரப்பிரதேசத்தில் வாரி வழங்கிய ஜாட் இன மக்கள்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஜாட் இன மக்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் பாஜக அதிகப்படியான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் பாஜக கூட்டணியே அனைத்து மாநிலங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி பாஜக 320க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 100க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது.
2014ல் அதிமுக 37, 2019ல் திமுக 37.. பாஜக எதிர்ப்பு.. தமிழகத்தின் மரபணு என்பது மீண்டும் நிரூபணம்..!
உ.பியில் முன்னிலை
இந்நிலையில் அதிக எம்பிக்களை கொண்ட உத்தரப்பிரதேசத்திலும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. 80 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 55 இடங்களில் பாஜக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.
ஜாட் இன மக்கள் சப்போர்ட்
சமாஜ்வாதி கட்சி 24 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டும் முன்னிலையில் உள்ளது. ஜாட் இன மக்கள் அதிகம் நிறைந்த தொகுதிகள் அனைத்திலும் பாஜக முன்னிலையில் உள்ளது.
ஐமுகூ சரிவு
குறிப்பாக ஜாட் இன மக்கள் ஆதிகக்கம் நிறைந்த அலிகார்க், ஹத்ரா, பக்பட், புலான்தஷர் மற்றும் முசாஃபர்நகர் ஆகிய தொகுதிகளில் பாஜக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. ஜாட் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சரிவை சந்தித்துள்ளது.
கோரக்பூர் - பாஜக
கோரக்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ரவி கிருஷ்ணன் முன்னணியில் உள்ளார். உத்தரப்பிரதேச முதல்வராக உள்ள யோகி ஆதித்யநாத் 2004ஆம் ஆண்டு முதல் இந்த தொகுதியில்தான் எம்பியாக தேர்வானார்.
இஸ்லாமியர்கள் ஆதிக்கம்
மத்திய மற்றும் வடக்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள தொகுதிகளிலும் பாஜகவே முன்னணியில் உள்ளது. தலித்துகள், இஸ்லாமியர்கள், மற்றும் யாதவர்கள் நிறைந்த பகுதிகளில் மட்டுமே ஐக்கிய முற்போக்கு கூட்டணி முன்னிலையில் உள்ளது.
ஸ்மிருதி இரானி முன்னிலை
அமேதி தொகுதியில் ராகுல்காந்தி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். அங்கு அவரை எதிர்த்து போட்டியிட்ட மத்திய அமைச்சரும் பாஜக வேட்பாளருமான ஸ்மிருதி இரானி முன்னணியில் உள்ளார்.
கடந்தமுறை தோல்வி
காங்கிரஸின் கோட்டையாக கருதப்படும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி 2004ஆம் ஆண்டு முதல் எம்பியாக தேர்வாகி வந்தார். இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ராகுலை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி, அப்போது அவருக்கு கடுமையான போட்டியை கொடுத்தபோதும் மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
மோடி முன்னிலை
இந்நிலையில் இரானிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது பாஜக. அங்கு தற்போது ராகுலை பின்னுக்கு தள்ளி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார் இரானி. இதேபோல் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். ஷரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மசூத் முன்னிலை வகிக்கிறார்.