ஒருவழியா சாதிச்சிட்டீங்க.. உத்தரப் பிரதேச முதலமைச்சருக்கு வாழ்த்து சொன்ன பிரிட்டன் எம்.பி
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அமைதியை ஏற்படுத்தியுள்ளதாகவும், எனவே அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் இந்திய வம்சாவழியை சேர்ந்த பிரிட்டன் எம்.பி வீரேந்திர சர்மா கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியை பாராட்டி பிரிட்டன் எம்பி வீரேந்திர சர்மா வாழ்த்து அட்டையை அனுப்பியுள்ளார். அதில், "யோகி ஆதித்யநாத் அவர்களுக்கு, உ.பி.யில் சிறந்த வெற்றிகளைப் பெற்று மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தியதற்காக உங்களை வாழ்த்த விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார். மாநிலம் முழுவதும் எற்கெனவே மாஃபியாக்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்து வந்ததாகவும், அதை பாஜகதான் கட்டுப்படுத்தியது என்றும் பலமுறை யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.
இப்படி இருக்கையில் பிரிட்டன் நாட்டின் எம்பி ஒருவர் உத்தரப் பிரதேச முதல்வர் குறித்து பாராட்டி எழுதியிருப்பது உ.பி அரசுக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த அங்கீகாரம் உ.பியை ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தும் முயற்சிக்கு ஊக்கமாக இருக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு, அதையடுத்து நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கியது என தொடர்ச்சியாக உ.பி அரசின் செயல்பாடுகள் பெரும் கவனத்திற்குள்ளாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications