உ.பி இன்ஸ்பெக்டர் கொலையில் புதிய திருப்பம்... கற்கள், கோடாலியால் குண்டர்கள் தாக்கியது அம்பலம்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பசு குண்டர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் துறை அதிகாரி, மரணத்துக்கு முன்னர் கோடாலியாலும், கற்களாலும் கோரமாக தாக்கப்பட்டு அதன் பின்னரே சுட்டுக்கொல்லப்பட்ட அதிர்ச்சி தகவல் தற்போது வெளி வந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள புலந்த்சாகரின் மஹாவ் கிராமத்தில் கடந்த 3ம் தேதி பசு வதையின் பெயரில் கலவரம் நிகழ்ந்தது. அதில், புலந்த்சாகரின் சாய்னா காவல் நிலைய ஆய்வாளர் சுபோத் குமார் சிங் மற்றும் மாணவர் சுமித் சிங் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
கலவரத்தை நடத்தியதாகவும், இருவரது கொலை வழக்கிலும் முக்கிய குற்றவாளிகளாக புலந்த்சாகர் மாவட்ட பஜ்ரங் தளம் அமைப்பாளரான யோகேஷ் ராஜ், அவரது அமைப்பு சகாக்களான ஷிகார் அகர்வால் மற்றும் உபேந்திர ராகவ் ஆகியோர் மீதும் வழக்கு பதிவானது. மேலும், வழக்கில் குறிப்பிட்ட 76 பேரில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் தலைமறைவாக உள்ளனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளி
புலந்த்சாகர் கலவரத்தில் சாய்னா காவல் நிலைய ஆய்வாளர் சுபோத் குமார் சிங்கை சுட்டுக் கொன்றதாக பிரசாந்த் நட் என்பவரை உத்தரப் பிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந் நிலையில், காவல்துறை அதிகாரி கொல்லப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக துப்பாக்கியால் கொல்லப் படுவதற்கு முன்னாள் நடந்தது என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
திடுக்கிடும் தகவல்
கைது செய்யப்பட்டுள்ள பிரசாந்த் நட் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. பசு குண்டர்களால் பிரச்னை வெடித்த போது, பெரிய போலீஸ் படையுடன் சுபோத் குமார் சென்றுள்ளார்.
ஆவேசமடைந்த கலவரக்காரர்கள்
கலவரத்தை அடக்க போலீஸ் படையுடன் அவர் சென்ற போது, அங்கு கூடியிருந்த 400க்கும் மேற்பட்டோர் ஆவேச குரல் எழுப்பியுள்ளனர். பின்னர், சுபோத் குமார் சிங்கை அங்கிருந்த பாறை ஒன்றில் மோதவிட்டு தாக்கி உள்ளனர். ஆவேச கும்பலிடம் இருந்து அவர் தப்பிக்க முயற்சித்த போதும். பசு குண்டர்கள் அவரை விடவில்லை.
கோடாலி, கற்களால் தாக்குதல்
அதன் பின்னர் கோடாலியில் அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். சுபோத் குமார் சிங்கை காப்பாற்ற முயன்ற சக காவலர்களையும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கற்களை வீசி தாக்கியுள்ளனர். பின்னர் ஒரு வழியாக அவரை மீட்டு காவல்துறை வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.
வாகனத்துக்கு தீ வைக்க முயற்சி
அப்போதும் ஆத்திரம் அடங்காத பசு குண்டர்கள், அந்த வாகனத்தை கீழே தள்ளினர். உள்ளேயிருந்த சுபோத்குமார் சிங்கை இழுத்து போட்டி தாக்கி உள்ளனர். பின்னர் அந்த வாகனத்தை தீ வைத்து எரிக்க முயன்றுள்ளனர். இது தவிர சுபோத்குமார் சிங்கின் உடற்கூராய்விலும் பல முக்கிய தகவல்கள் வெளி வந்துள்ளன.
உடலில் காயங்கள்
மிக குறுகிய தொலைவில் இருந்து அவர் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார் என்றும், அவரது புருவத்தின் மீதான காயங்கள் உறுதிப்படுத்துவதாகவும், மேலும் கை, கால்களில் ஏகப்பட்ட இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
வேண்டுமென்றே கைது
இதனிடையே, இந்த சம்பவத்தில் கடைசியாக கைது செய்யப்பட்டுள்ள பிரசாந்த் நட்டின் சகோதரர், உண்மை கொலையாளிகளை கைது செய்யாமல் தவறுதலாக தமது சகோதரரை போலீசார் வேண்டுமென்றே கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.