மீண்டும் ஞானவாபி மசூதி சர்ச்சை.. இந்திய தொல்லியல் ஆய்வுக்கு உத்தரவிடனும்! 4 பெண் பக்தர்கள் மனு
லக்னோ: கியான்வாபி மசூதி நிலம் காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு சொந்தமானது என்று இந்துத்துவா அமைப்பினர் உரிமைகோரி வரும் நிலையில்,மசூதி வளாகத்தை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் சர்வே செய்ய உத்தரவிட வேண்டும் என 4 பெண் பக்தர்கள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி அருகே அமைந்து உள்ள காசி விஸ்வநாதர் கோயில் அருகே முகலாய பேரரசர் அவுரங்கசீபால் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கியான்வாபி மசூதி அமைந்து இருக்கிறது. கோயிலும் மசூதியும் அமைந்து இருக்கும் இப்பகுதி எவ்வித மத பதற்றமும் இல்லாத மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டான இடமாக திகழ்ந்தது.

இந்த ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவற்றின் அருகே சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. ஆண்டுக்கு 5 முறை இந்த சிலைக்கு பூஜை நடத்த அனுமதி கோரி 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை கடந்த ஆண்டு விசாரித்த வாரணாசி நீதிமன்றம் ஞானவாபி மசூதியில் வீடியோ ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டது.
இந்த நிலையில் மசூதியை நிர்வகித்து வரும் அஞ்சுமன் ஜாமியா கமிட்டி சார்பில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 17 மாதம் தேதிக்குள் ஆய்வை நிறைவு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய ஆணையிட்டது.
இதற்கு எதிராக மசூதி நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கு குறித்த ஆவணங்களை பார்க்காமல் கள ஆய்வுக்கு தடை விதிக்க முடியாது என அவர் கூறியதை தொடர்ந்து, மசூதியில் கள ஆய்வு நடைபெற்றது.
3 நாட்கள் நடைபெற்ற ஆய்வின் முடிவில் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் போன்ற உருவம் ஒன்று இருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு சீல் வைக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், அது தொழுகைக்கு வருபவர்கள் தூய்மை செய்யும் தொட்டியில் வைக்கப்பட்ட நீர்வீழ்ச்சி போன்ற அமைப்பு என மசூதி நிர்வாகம் தெரிவித்தது.
அதே நேரம் மசூதியில் தொழுகை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதியளித்ததை எதிர்த்தும் தனி வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணைகள் உச்சநீதிமன்றத்திலும், மாவட்ட நீதிமன்றத்திலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில்தான், பெண் பக்தர்கள் வாரணாசி மாவட்ட நீதிபதியிடம் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்கள்.
அதில், ஞானவாபி மசூதி, கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டதா என்பதை அறிய இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என அவர்கள் கோரி இருக்கிறார்கள். அந்த மனுவில் முகலாய பேரரசர் ஹவுரங்கசீப் கொடூரமானவர் என்றும், அவரது உத்தரவின்பேரில் ஆதிஷேஷ்வர் கோயில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications