நாடாளுமன்ற தேர்தல்.. உத்தரப் பிரதேசத்தை அப்படியே தட்டி தூக்கும் பாஜக! வெளியான சர்வே முடிவுகள்
லக்னோ: அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிக மக்களவை தொகுதிகளை யார் கைப்பற்றுவார் என்கிற எதிர்பார்ப்பு மேலெழுந்திருக்கிறது. இந்நிலையில், இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் பாஜகவுக்கு இது ஹாட்ரிக் வெற்றி. அதை விட முக்கியமாக முன்னாள் பிரதமர் நேருவுக்கு பின் தொடர்ச்சியாக 3 முறை பிரதமராக பதவியேற்கும் என்கிற சாதனையை நரேந்திர மோடி பெறுவார். மட்டுமல்லாது 2025ம் ஆண்டு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதை சிறப்பாக கொண்டாட வேண்டும் எனில் பாஜக மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பது அவசியமாகும். ஆகவே 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு மிகவும் முக்கியமானது.

மறுபுறம் காங்கிரஸ் கட்சியை பொறுத்த அளவில் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வாழ்வா சாவா போராட்டமாக இருக்கிறது. ஏனெனில் கடந்த 9 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. இந்த காலத்தில் ஏராளமான கசப்பான சம்பவங்கள் கட்சிக்குள்ளும் வெளியேயும் நடந்திருக்கிறது. குலாம் நபி ஆசாத் போன்ற முக்கிய தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறியது, கேப்டன் அம்ரீந்தர் சிங் போன்றோர் கட்சி தாவியது, பஞ்சாபிலும், டெல்லி உள்ளாட்சியிலும் ஆட்சியை இழந்தது, ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு, நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாவுக்கு நெருக்கடி என கட்சி படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறது.
எனவே இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று பெரிய அளவில் கூட்டணி அமைத்திருக்கிறது. இதற்கு முன்னர் தங்களுடன் முரண்பட்டிருந்த ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளை கூட சமாதானம் பேசி இந்த கூட்டணியில் இணைத்திருக்கிறது. இக்கூட்டணிக்கு 'இந்தியா' என்றும் பெயரிட்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முழு வீச்சில் களம் இறங்கியுள்ளது காங்கிரஸ். இந்த கூட்டணியின் 3 கட்ட கூட்டங்கள் ஏற்கெனவே நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது தொகுதி பங்கீட்டில் கட்சி கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் பாஜகவும், காங்கிரஸும் எத்தனை இடங்களை வெல்லும் என்பது தொடர்பான கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த வரிசையில் தற்போது உத்தரப் பிரதேசத்திற்கான கருத்து கணிப்புகள் வெளிவந்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த அளவில் உத்தரப் பிரதேச மாநிலம் மிகவும் முக்கியமானதாகும். இங்கு அதிகமான நாடாளுமன்ற தொகுதிகள் இருப்பதால், தேர்தலில் பெரும்பான்மை வெற்றியை பெற காங்கிரஸும், பாஜகவும் மாறி மாறி இந்த மாநிலத்தை குறி வைத்து வருகின்றன.
இப்படி இருக்கையில், இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் (India TV-CNX) சார்பில் நடத்தப்பட்ட தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவுக்கு 70 இடங்களும், காங்கிரஸுக்கு 2 இடங்களும், சமாஜ்வாடி கட்சி 4, உ.பியின் மாநில கட்சியான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சிக்கு 1 இடம், இராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு 1 இடம், அப்னா தளம் கட்சிக்கு 2 இடங்களும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. அதேபோல பகுஜன் சமாஜ் கட்சிக்கு எந்த இடமும் கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் மேற்கு வங்காளம், ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, அசாம், அருணாச்சல பிரதேசம், திரிபுரா, மணிப்பூர், மேகலாயா, சிக்கிம், நாகலாந்து மற்றும் மிசோராம் என 18 மாநிலங்களில் கருத்துக்கணிப்பை நடத்தியிருந்தது. அதன்படி இந்த 18 மாநிலங்களில் மொத்தமுள்ள 282 எம்பி தொகுதிகளில் 118 தொகுதிகளை பாஜகவும், 110 தொகுதிகளை இந்தியா கூட்டணியும் வெல்ல வாய்ப்பிருக்கிறது என்று கூறியிருந்தனர். தற்போத இதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலத்தின் கருத்துக் கணிப்புகளும் வெளியாகியுள்ளன.
ஒட்டு மொத்தமாக தேசிய அளவில், 543 எம்பி தொகுதிகளில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 318 இடங்களையும், இந்தியா கூட்டணி 175 இடங்களிலும் மற்ற கட்சிகள் 50 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications