“ஷாக்”.. இந்தியாவில் 76.5 கோடி பேருக்கு கொரோனா? குறைக்கப்பட்டதா எண்ணிக்கை? விஞ்ஞானிகள் பரபர தகவல்
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என அரசு அறிவித்ததை 17 மடங்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என இந்திய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
லக்னோ: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அரசால் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையை விட 17 மடங்கு அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்று இந்திய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. 88 விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் 76.5 கோடி பேருக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்தனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த 2020 ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரை பாதிப்புகள் தொடர்ந்து வருகிறது. முதலாவது அலை, 2 வது அலை, 3 வது அலை என அடுத்தடுத்து பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்.
தற்போது கொரோனா தொற்று குறைந்து இருந்தாலும் பாதிப்புகள் தொடர்ந்து பதிவாகிக் கொண்டே வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணையதள தகவலின்படி கொரோனா தற்போது 1785 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4.41 கோடி பேர் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருப்பதாகவும், 53 ஆயிரத்து 746 பேர் உயிரிழந்ததாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. ஆனால், இந்த புள்ளி விவரங்களில் எண்ணிக்கை குறைது காட்டப்பட்டதாகவும், இதை விட பன்மடங்கு பாதிப்பு இந்தியாவில் ஏற்பட்டது எனவும் பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர்.

இந்திய விஞ்ஞானிகள் ஆய்வு
இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி நகரில் அமைந்து இருக்கும் புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை பேராசிரியர் ஞானேஷ்வர் சவுபே தலைமையில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்தியாவின் 34 ஆராய்ச்சி நிறுவனங்களை சேர்ந்த 88 விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

76.5 கோடி பேருக்கு கொரோனா
இதன் முடிவில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என மத்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையான 4.5 கோடியை விட 17 மடங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். அதாவது 76.5 கோடி பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கணித்து உள்ளனர்.

அறிகுறி இல்லாதது காரணம்
கொரோனா பரவல் விகிதம், தொற்று பாதிப்பின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இவர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த எண்ணிக்கை வந்து இருக்கிறது. கொரோனா அறிகுறி ஏற்படாமலேயே பலரும் கொரோனா பாதிப்பு இருந்ததும், அதனால் அவர்கள் பரிசோதனை செய்யாததும் இந்த எண்ணிக்கையில் வித்தியாசம் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

உலக சுகாதார நிறுவனம்
இதற்கு முன்பாக பன்னாட்டு ஊடகங்களும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக சந்தேகம் கிளப்பின. உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை சேகரித்து உலக நாடுகளுக்கு அது தொடர்பான அறிவுரைகளை வழங்கி வந்த உலக சுகாதார நிறுவனம் இந்தியாவில் கொரோனாவால் 47 லட்சம் பேர் கூடுதலாக உயிரிழந்து இருக்கலாம் என்ற அதிர்ச்சிகர தகவலை கடந்த ஆண்டு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications