இன்னா குமாரு.. உ.பி.யில் 5, 6 சீட்தான்னு அகிலேஷ் ரொம்பவே அசிங்கப்படுத்தறாரே.. விரக்தியில் காங்கிரஸ்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சிங்கிள் டிஜிட் எண்ணிக்கையில்தான் தொகுதிகள் ஒதுக்க முடியும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதனால் காங்கிரஸ் கட்சி ரொம்பவே அப்செட்டாகிவிட்டதாக கூறப்படுகிறது.
"இந்தியா" கூட்டணி கட்சிகளிடையே பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. பீகார் மாநிலத்தில் ஆளும் ஜேடியூ-ஆர்ஜேடி கட்சிகள் இணைந்து காங்கிரஸுக்கு அதிகபட்சம் 2 அல்லது 3 தொகுதிகள்தான் ஒதுக்க முடியும் என ஓரம் கட்டிவிட்டன. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ஆர்ஜேடி- ஜேடியூ தலா 17 தொகுதிகள் எனவும் காங்கிரஸ்- இடதுசாரிகளுக்கு எஞ்சிய 6 இடங்கள்தான் எனவும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

உ.பி தொகுதி பங்கீடு: காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இதனால் ரொம்பவே மனமுடைந்து போயிருக்கின்றனர். தற்போது உத்தரப்பிரதேசத்திலும் அதே பார்முலாவையே சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்வைக்கிறார். இதனால் என்னதான் செய்வது என தெரியாமல் காங்கிரஸ் விழிபிதுங்கி நிற்கிறதாம்.
அகிலேஷ் பார்முலா: உ.பி.யில் 2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி ரேபரேலி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றார். அமேதி தொகுதியில் ராகுல் காந்தியே தோல்வி அடைந்தார். 2019-ல் ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றதால் 2024 தேர்தலில் 5 அல்லது அதிகபட்சமாக 6 தொகுதிகளை கொடுக்கலாம் என்பதுதான் அகிலேஷின் பார்முலா.
அடப்பாவிகளா 6 சீட்தானா?: ஆனால் காங்கிரஸ் கட்சியோ 2009 தேர்தலில் 18 இடங்களில் காங்கிரஸ் வென்றது. ஆகையால் குறைந்தபட்சம் 16 தொகுதிகளையாவது கொடுக்க வேண்டும் என அடம்பிடிக்கிறது. அப்படி இல்லையெனில் பேசாமல் 80 லோக்சபா தொகுதிகளிலும் தனித்து கூட போட்டியிட்டுக் கொள்கிறோம் என விரக்தியான முடிவை சொல்லுகிறதாம்.
கொடுக்கிறதை வாங்கிக்கனுமாம்: சமாஜ்வாதி கட்சி சார்பில் இன்னொரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. அதாவது "இந்தியா" கூட்டணியில் இருக்கும் ராஷ்டிரிய லோக் தள், அப்னா தள்(கே) மற்றும் பீம் ஆர்மிக்கும் நாங்கள் தொகுதிகள் ஒதுக்க வேண்டும். அதனால்தான் காங்கிரஸ் கட்சிக்கு மிக அதிகமாக போனால் போகட்டும் என 6 தொகுதிகளை ஒதுக்குகிறோம். உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை 'இந்தியா' கூட்டணி தொகுதிகளை ஒதுக்காது; சமாஜ்வாதி கட்சிதான் தொகுதி எடுத்துக் கொண்டு இதர கட்சிகளுக்கு தரும்; இதனை ஏற்றால் பேசுங்கள்.. இல்லையெனில் நடையை கட்டுங்கள் என கறார் முகத்தை காட்டுகிறதாம் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி. அய்யோ பாவமே!












Click it and Unblock the Notifications