"லவ் ஜிஹாத்"னு பரவிய வதந்தி.. பதறியடித்து வந்து முஸ்லீம் ஜோடியை பிடித்து சென்ற உ.பி. போலீஸ்!
பரவிய வதந்தியால், ஒரு முஸ்லிம் ஜோடியை கைது செய்தது உபி போலீஸ்
லக்னோ: அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்னு சொல்வாங்க.. அந்தக் கதைதான் உ.பியில் நடந்துள்ளது. யாரோ கிளப்பி விட்ட வதந்தியை நம்பி விரைந்து வந்த போலீஸார் முஸ்லீம் மணமக்களை பிடித்துச் சென்ற செயலால் இரு தரப்பு உறவினர்களும் கடும் கொதிப்படைந்து விட்டனர்.
உபியின் குஷி நகரில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது. அந்த ஊரை சேர்ந்த முஸ்லீம் மணமகன் ஒருவருக்கும், மணமகளுக்கும் திருமணம் நிச்சயம் செய்தனர். திருமணத்திற்கான வேலைகளும் ஜரூராக நடந்து வந்தன. இந்த நிலையில் யாரோ சிலர் குஷிநகர் போலீஸாருக்குப் போனைப் போட்டுள்ளனர்.
அதில், ஒரு இந்து பெண்ணை மதம் மாற்றி முஸ்லீம் மணமகனுக்குக் கட்டி வைப்பதாக கூறியுள்ளனர். உ.பி. போலீஸாச்சே.. விடுமா இதை.. உடனே கோபத்துடன் கிளம்பி சென்று மணமகனையும், மணமகளையும் பிடித்தது.
பெல்ட்டால் தாக்கினர்
என்ன ஏது என்று கூட விசாரிக்கவில்லை. உறவினர்கள் கூறியதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இருவரையும் பிடித்துச் சென்று விட்டனர். காவல் நிலையத்துக்கு மாப்பிள்ளை ஹைதர் அலியை அழைத்துச் சென்ற போலீஸார் அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர்... சரமாரியாக அடிக்கவும் செய்துள்ளனர். பெல்ட்டாலும் அவரை போலீஸார் அடித்ததாக கூறப்படுகிறது.
முஸ்லிம்கள்
இதுதொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், ஆனால் உண்மையில் அந்த இருவருமே முஸ்லீம்கள்தான் என்பது போலீஸாருக்கு தெரியவில்லை... சொல்லியும் அவர்கள் ஏற்கவில்லையாம். ஆனால் பிறகுதான், மணமகள் வீட்டார் வீடியோ காலில் போலீஸாரிடம் பேசி தாங்களும் முஸ்லீம்கள்தான் என்பதை நிரூபித்துள்ளனர்... மேலும் ஆதார் கார்டு அடையாளத்தையும் சமர்ப்பித்துள்ளனர். அதன் பிறகே போலீஸாருக்கு தாங்கள் செய்த தவறு தெரிய வந்தது.
மணமக்கள்
இதையடுத்து உடனடியாக போலீஸார் மாப்பிள்ளை, பெண்ணை விடுவித்துள்ளனர். அதேசமயம், தாங்கள் யாரையும் அடிக்கவில்லை என்றும் பொதுமக்கள் முன்னிலையில்தான் மணமகன், மணமகள் இருவரும் அழைத்து செல்லப்பட்டதாகவும் விளக்கியுள்ளனர். ஆனால் தன்னையும், தான் மணக்கவிருந்த ஷபீலாவையும் போலீஸார் தனி அறையில் அடைத்து அடித்ததாக ஹைதர் அலி குற்றம் சாட்டியுள்ளார். தங்களது மத அடையாளத்தை காட்டுமாறு கூறி அடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அடையாளம்
அதை விட முக்கியமாக இருவரும் மத அடையாளங்களைக் கூறியும் போலீஸார் விடவில்லையாம். மாறாக ஷபீலா வீட்டிலிருந்து யாராவது வந்து அடையாளத்தை நிரூபித்தால்தான் விடுவோம் என்றும் சொன்னாராம்... இதையடுத்து ஷபீலாவின் அண்ணன் அஸம்கரிலிருந்து விரைந்து வந்து தனது தங்கையையும், அவரை கட்டிக் கொள்ளவிருந்தவரையும் மீட்டுச் சென்றாராம்.