ஜஸ்ட்மிஸ்.. கொளுத்திய வெயிலால் அப்படியே உருகிய தண்டவாளம்! பைலட்டால் தப்பிய ரயில்! செம சாமர்த்தியம்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள நிகோஹான் ரயில் நிலையத்தல் கடும் வெப்பம் காரணமாக தண்டவாளங்கள் உருகி சீர்க்குலைந்தன. அப்போது தண்டவாளத்தில் ஏற்பட்ட அதிர்வை வைத்து பிரச்சனையை முன்கூட்டியே அறிந்து சாமர்த்தியமாக செயல்பட்ட பைலட்டால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த முறை கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக வாட்டியது. தற்போது கோடைக்காலம் முடிந்தாலும் கூட பல மாநிலங்களில் இன்னும் வெயிலின் தாக்கம் மட்டும் குறைந்தபாடில்லை. குறிப்பாக உத்தர பிரதேச மாநிலத்தில் வெயில் கொளுத்து வருகிறது.

இந்த அதிகப்படியான வெப்பம் காரணமா ரயில் தண்டவாளங்களில் உருகி சீர்க்குலையும் நிலை உருவாகி உள்ளது. இதனால் தண்டவாளங்களை கண்காணிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் நேற்று உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் -பிரதாப்கர் வழித்தடத்தில் உள்ள நிகோஹான் ரயில் நிலையத்தை நீலாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை நெருங்கியது. இந்த வேளையில் வழக்கமாக செல்லும் தண்டவாளத்தில் ஒரு ரயில் நின்றது. இதனால் நீலாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் லூப்லைன் தண்டவாளத்தில் மாற்றி விடப்பட்டது.
இதனால் அந்த ரயில் லூப்லைனில் செல்ல வேண்டி இருந்தது. அப்போது தண்டவாளத்தில் ரயில் செல்லும்போது வரும் அதிர்வில் மாற்றம் உருவானது. இதனால் சந்தேகத்தில் பைலட் ரயிலை இயக்காமல் நிறுத்தினார். இதையடுத்து உடனடியாக அவர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். என்ஜினீயரிங் பிரிவு ஊழியர்கள், அதிகாரிகள் விரைந்து வந்தனர்.
அப்போது தண்டவாளங்கள் சீர்க்குலைந்து இருப்பது தெரியவந்தது. அதாவது கடும் வெப்பத்தின் காரணமாக தண்டவாளங்கள் உருகி வளைந்து நெளிந்து இருந்தது. இதையடுத்து ஊழியர்கள் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்பிறகு இந்த ரயில் மாற்று தண்டவாளத்தில் இயக்கப்பட்டது. அதோடு லூப்லைனில் பிற ரயில்கள் இயங்காமல் உடனடியாக தடை செய்யப்பட்டது. பைலட்டின் சாமர்த்தியத்தால் பெரும் ரயில் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பைலட்டுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே பராமரிப்பு பணியை சரியாக மேற்கொள்ளாமல் இருந்தது தான் தண்டவாள சீர்குலைவுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி லக்னோ கோட்ட ரயில்வே மேலாளர் (டிஆர்எம்) சுரேஷ் சப்ரா உத்தரவிட்டுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் மேற்கு வங்க மாநிலம் ஷாலிமாரில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே சரக்கு ரயில் மீது தடம் புரண்டது. அதன்பிறகு அந்த ரயில் பெட்டி மீது மோதி பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. இந்த கோர விபத்தில் 290 பேர் வரை பலியான நிலையில் 750க்கும் அதிகமானவர்கள் காயமடைந்த சோக சம்பவம் நடந்த நிலையில் லக்னோ அருகே ரயில் பைலட்டின் சாமர்த்தியத்தால் நேற்று பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications