கிளம்பியது எதிர்ப்பு.. அரசு வேலை வாய்ப்பில் ஓபிசி-க்கு பாரபட்சம்.. பாஜக கூட்டணி கட்சியே கேள்வி
லக்னோ: உத்தர பிரதேசத்தில் அரசு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு வாய்ப்பு நிராகரிக்கப்படுகிறது என்று பாஜகவின் கூட்டணி கட்சியான அப்னா தளம் கேள்வி எழுப்பியுள்ளது. பாஜக கூட்டணியில் நீண்ட காலம் அங்கம் வகிக்கும் அப்னா தளம் கட்சி முதல் முறையாக பாஜகவிற்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி வகித்து வருகிறார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்று அப்னா தளம் (எஸ்). இதன் தலைவராக அனுப்ரியா படேல் உள்ளார்.

மத்தியில் 2014-ஆம் ஆண்டு முதலே தேசிய ஜனநாயக கூட்டணியில் அப்னா தளம் அங்கம் வகிக்கிறது. அதேபோல உத்தர பிரதேசத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பாஜக கூட்டணியில் அப்னா தளம் அங்கம் வகித்து வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தற்போது மத்திய அமைச்சராகவும் அனுப்ரியா படேல் உள்ளார்.
பாஜக கூட்டணியில் முக்கிய கட்சியாக இடம் பெற்று இருக்கும் அனுப்ரியா படேல் தற்போது இட ஒதுக்கீடு விவகாரத்தில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு அனுப்ரியா படேல் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: - அரசு வேலைவாய்ப்புகளில் நேர்முகத்தேர்வின் போது இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்கள், மற்றும் எஸ்.டி பிரிவினர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள்.
இந்த பதவியிடங்கள் இடஒதுக்கீடு இல்லாத இடமாக பிறகு மாற்றப்படுகிறது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் தகுதியான மதிப்பெண்கள் பெற்று நேர்முகத்தேர்வில் மெரிட் அடிப்படையில் தேர்ச்சி பெற்றாலும் கூட அவர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள். பணி நியமன நடைமுறைகள் முடிந்தாலும் கூட, இந்த பணியிடங்கள் எல்லாம் இட ஒதுக்கீட்டு பிரிவினரால் மட்டுமே நிரப்பப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
அனுப்ரியா படேல் பாஜகவிற்கு எதிராக குரல் கொடுப்பது இதுவே முதல் முறையாகும். பாஜக கூட்டணியில் நீண்ட காலமாக உள்ள அப்னா தளம் கட்சி, யோகி ஆதித்யநாத்திற்கு கடிதம் எழுதியிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. உத்தர பிரதேசத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் 17 இடங்களில் அப்னா தளம் கட்சி போட்டியிட்டது. இதில், 12 இடங்களில் வெற்றி பெற்றது.












Click it and Unblock the Notifications