மேடையிலேயே பாஜக நிர்வாகி காலில் விழுந்த பிரதமர் மோடி.. பதறிய தொண்டர்கள்! என்ன நடந்தது? பரபர வீடியோ
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் மோடி தீவிர பரப்புரை செய்து வரும் நிலையில், பிரசார மேடையில் பிரதமர் மோடி செய்த செயல் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.
Recommended Video
நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 7 கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல் அங்கு நடந்து முடிந்துள்ளது.
அடுத்த வரும் ஜன. 23இல் அடுத்தகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் மத்திய உபி-இல் உள்ள 9 மாவட்டங்களில் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், அங்கு ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள பாஜக தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அங்கு தற்போது பாஜகவுக்கும் சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே தான் நேரடியாகப் போட்டி நிலவுகிறது. அங்குப் பல ஆண்டுகளாகவே எந்தவொரு கட்சியும் ஆட்சியைத் தக்க வைத்தது இல்லை. இதனால் ஆட்சியைத் தக்க வைக்க பாஜக அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இதற்காகப் பிரதமர் மோடி தொடங்கி பாஜகவின் பல்வேறு தலைவர்களும் அங்குத் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக நிர்வாகி
அதன்படி பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் உத்தரப் பிரதேசத்தில் சூறாவளி பிரசாரம் செய்தார். அப்போது உன்னாவ் பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பாஜகவின் உ.பி. மாநில தலைவர் சுதந்திர தேவ் சிங் மற்றும் பாஜகவின் உன்னாவ் மாவட்டத் தலைவர் அவதேஷ் கட்டியார் ராமர் சிலையைப் பிரதமர் மோடிக்கு பரிசளித்தனர். அதன் பின்னர் உன்னாவ் மாவட்டத் தலைவர் பாஜக அவதேஷ் கட்டியார் பிரதமரின் பாதங்களைத் தொட்டு வணங்கினார்.

காலில் விழுந்த பிரதமர் மோடி
அவரை தடுத்த பிரதமர் மோடி, யாரும் யார் காலிலும் விழக் கூடாது என்று விளக்கினார். மேலும், யாருமே எதிர்பார்க்காத வகையில் மேடையிலேயே பிரதமர் மோடி, அவதேஷ் கட்டியார் காலில் விழுந்தார். இந்தியாவில் அரசியல் தலைவர்கள் காலில் தொண்டர்கள் உள்ளிட்ட மற்ற தலைவர்கள் விழுந்து வணங்கும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், இது தவறான செயல் என்பதை விளக்கும் வகையில் பிரதமர் செய்த இச்செயல் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.

4ஆம் கட்ட தேர்தல்
அவதேஷ் கட்டியார் கடந்த ஆண்டு செப்டம்பரில் பாஜகவால் உன்னாவ் மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் அதற்கு முன்பு உன்னாவ் மாவட்ட பாஜக பொதுச் செயலாளராக இருந்தார். உன்னாவ் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி நான்காம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. உன்னாவ் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சமாஜ்வாதி கட்சியைக் கடுமையாக விமர்சித்தார்.

பிரதமர் மோடி அட்டாக்
அகிலேஷ் யாதவை கடுமையாக விமர்சித்துப் பேசிய பிரதமர் மோடி, "பதவிக்காகத் தந்தையையே (முலாயம் சிங் யாதவ்) மேடையில் இருந்து இறக்கிவிட்டு, அவமானப்படுத்தி கட்சி கைப்பற்றியவர் அகிலேஷ் இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்களுக்கு மக்களைக் காட்டிலும் வாரிசு அரசியல் தான் முக்கியம். இதனால் தான் உத்தரப் பிரதேச மக்களுக்கு உதவிகள் தேவைப்படும்போது அவர்கள் எதுவுமே செய்யவில்லை" என்று சாடினார்.












Click it and Unblock the Notifications