காங். பேரணியில் யோகிக்கு ஆதரவாக கோஷமிட்ட பாஜகவினர்! சிரித்து கொண்டே பிரியங்கா காந்தி செய்த 'சம்பவம்'
லக்னோ: உத்தரப் பிரதேச்தில் தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பிரியங்கா காந்தி செயல் ஒன்று இப்போது இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது,
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் பிப்.10ஆம் தேதி தொடங்கி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதிகபட்சமாக உபி-க்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் கூட, தேர்தல் பிரசாரங்களை அனைத்து கட்சிகளும் தீவரமாக மேற்கொண்டு வருகிறது.

உ,பி தேர்தல்
குறிப்பாக, இந்த 5 மாநில தேர்தலில் பலரது கவனமும் உத்தரப் பிரதேசம் மீது தான் உள்ளது. நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலம் என்பதால் உத்தரப் பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர். மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் தற்போது பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. அங்கு பாஜகவுக்கும் சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

காங்கிரஸ்
அதேநேரம் உபி-இல் குறிப்பிடத் தகுந்த இடங்களில் வெல்ல வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக உள்ளது. இதற்காக உபி-இல் முகாமிட்டுள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கடந்த 2 ஆண்டுகளாகவே கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். பெண்களை முன்னிறுத்தி பிரசாரத்தை முன்னெடுத்துள்ள பிரியங்கா காந்தி மொத்தமுள்ள இடங்களில் 40% இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்கியுள்ளார்.

பிரியங்கா காந்தி
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் உத்தரப் பிரதேசத்தில் அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளதால், அக்கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். உபி-இல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இப்போது தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார், அதன்படி உபி-இல் உள்ள அலிகாரில் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த பாஜக தொண்டர்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவாகும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பினர்.

டிரெண்டிங்
இதனால் அங்குச் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், பிரியங்கா காந்தி வத்ரா சிரித்தவாறே பாஜக தொண்டர்களுடன் கைகுலுக்கினார். மேலும், பாஜக தொண்டர்களிடம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைக் கொடுத்த பிரியங்கா காந்தி, "இதைப் படியுங்கள்", என்றும் தெரிவித்தார். பின்னர், மீண்டும் அவர்களை நோக்கிக் கையசைத்த பிரியங்கா காந்தி அங்கிருந்து புறப்பட்டார். பிரியங்கா காந்தியின் இந்த செயல் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
உத்தரப் பிரதேசத்திற்காக பாரதி விதான் என்ற தேர்தல் அறிக்கையைக் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. உத்தரப் பிரதேச இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளதாகவும் இந்த பிரச்சினையைத் தீர்க்க காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று பிரியங்கா காந்தி குறிப்பிட்டார். மேலும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள இளைஞர்களிடம் கலந்து ஆலோசித்த பின்னரே இந்தத் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.











Click it and Unblock the Notifications