விண்ணை தொட்ட ஜெய்ஸ்ரீராம் கோஷம்! தங்கத்தில் தேன் தடவி கண் திறந்தார் ராமர்! 84 விநாடிகள் நடந்தது என்ன
லக்னோ: அயோத்தியில் பால ராமர் சிலையின் கண்கள் திறக்கப்பட்டு பிராண பிரதிஷ்டை நிறைவடைந்தது. தங்கக் கட்டியில் தேன் தடவி ராமரின் கண்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
500 ஆண்டு கால வரலாற்று சிறப்பு வாய்ந்த அயோத்தியில் ராமர் பிறந்த ஜென்பூமியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த கோயில் கட்டும் பணிகள் தொடங்கின.

சுமார் 2.7 ஏக்கர் பரப்பளவில் ராமர் கோயில் கட்டப்பட்டது. இந்த கோயில் குடமுழுக்கு இன்று நடைபெற்றது. சுமார் 2000 கோடி ரூபாயில் கட்டப்பட்ட இந்த கோயிலில் மக்கள், விஐபிக்கள் உள்பட லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்தனர்.
இந்த கும்பாபிஷேக விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அவர் அங்கு 4 மணி நேரம் இருந்தார். இந்த கோயில் கும்பாபிஷேகத்திற்கு அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என 7000 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டனர். இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வானது உலகம் முழுவதும் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இன்று நடைபெற்ற நிகழ்வுகள் என்னென்ன தெரியுமா? காலை 10.25 மணிக்கு அயோத்திக்கு மோடி வந்தார். அங்கு விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெற்ற இடத்திற்கு தனி விமானத்தில் சென்றார்.
இதைத் தொடர்ந்து 10.55 மணிக்கு ராமர் கோயில் இருக்கும் இடத்தை மோடி அடைந்தார். 11 மணி முதல் பகல் 12 மணி வரை கோயிலை பிரதமர் மோடி சுற்றி பார்த்தார்.
பகல் 12.05 முதல் 1 மணிக்குள் கோயில் கும்பாபிஷேக நிகழ்வுகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 200 கிலோ எடை கொண்ட பால ராமரின் சிலை ஆகம விதிகளின் படி கடந்த சில தினங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டு கோயில் கருவறையில் வைக்கப்பட்டது. அதன் கண்கள் மூடப்பட்டிருந்தன.
இந்த சிலையை மைசூர் சிற்பி யோகிராஜ் வடிவமைத்தார். தங்க கட்டியை தேனில் தடவி குழந்தை ராமரின் கண்கள் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இது ஒரு 84 வினாடிகள் நடந்த நிகழ்வாகும். அப்போது அவர் சிறிய கண்ணாடியையும் சுவாமிக்கு மோடி பரிசாக அளித்தார். 108 விளக்குகள் ஏற்றப்பட்டு இந்த குழந்தை ராமர் சிலை பிராண பிரதிஷ்டை நடைபெற்றது. இதையடுத்து ராமர் சிலைக்கு பிரதமர் தீபாராதனை காட்டினார்.












Click it and Unblock the Notifications