காசி - தமிழ்நாடு இடையேயான உறவுப் பாலம் உணர்வுப்பூர்வமானது.. வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு
லக்னோ: காசி தமிழ் சங்கமத்தின் 2-வது ஆண்டு நிகழ்வை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், காசி- தமிழ்நாடு இடையேயான உறவுப் பாலம் உணர்வுபூர்வமானது என்று கூறினார்.
ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, பிரதமர் நரேந்திர மோடி இன்று காசியின் நமோ படித்துறையில் காசி தமிழ் சங்கமம் 2023-ஐ தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி - வாரணாசி தமிழ் சங்கமம் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்டம் 2023 இன்று முதல் 30 வரை புனித நகரமான காசியில் (வாரணாசி) நடைபெறுகிறது. இதில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து முதல் குழு டிசம்பர் 15-ந் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 1400 பேர் (தலா 200 பேர் கொண்ட 7 குழுக்கள்) காசித் தமிழ்ச் சங்கமத்தின் இரண்டாம் கட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
400 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள்: காசியில் தங்கியிருக்கும் போது, அவர்களின் சுற்றுப்பயணத் திட்டத்தின்படி, அவர்கள் பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கும் செல்வார்கள். இந்த இரண்டாம் கட்ட காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்கும் குழுவினர் 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் குழுவுக்கு கங்கை எனவும், ஆசிரியர்கள் குழுவுக்கு யமுனை எனவும், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் குழுவுக்கு கோதாவரி எனவும், ஆன்மீக குழுவுக்கு சரஸ்வதி எனவும்,
விவசாயிகள் மற்றும் கைவினை கலைஞர்கள் குழுவுக்கு நர்மதா எனவும், எழுத்தாளர்கள் குழுவுக்கு சிந்து எனவும், வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் குழுவுக்கு காவேரி எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இதில் மொத்தமாக 1400 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரியில் இருந்து காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
காசி- தமிழ்நாடு உறவு: இந்தப் பயணத்தில் 2 நாட்கள் வெளி இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளுதல், காசியின் 2 நாள் பயணம், பிரயாக்ராஜ் மற்றும் அயோத்தியில் தலா 1 நாள் பயணம் ஆகியவை அடங்கும். காசி தமிழ் சங்கமத்தின் 2-வது ஆண்டு நிகழ்வை பிரதமர் மோடி தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி பேசியதாவது:- விருந்தினர்களாக இன்றி ஒரு குடும்பத்தின் உறுப்பினர்களாக இங்கே வந்து இருக்கிறீர்கள்.
காசி- தமிழ்நாடு இடையேயான உறவுப் பாலம் உணர்வுபூர்வமானது. காசி தமிழ்சங்கமம் என்பது ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வுக்கு தொடர்ந்து வலுவூட்டி வருகிறது. காசியிலேயே காசி- தெலுங்கு சங்கமமும் நடந்தேறியது. குஜராத்தில் செளராஷ்டிர தமிழ்சங்கமத்தை வெற்றிகரமாக அரங்கேற்றினோம். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதை முன்னெடுத்து செல்லும் பொருட்டு நமது ஆளுநர் மாளிகைகளும் கூட பெரிய அளவில் முன்னெடுப்பை செய்து இருக்கின்றன.
செங்கோல்: இப்போது ஆளுநர் மாளிகைகளில் பிற மாநிலங்களின் நிறுவன நாள் கொண்டாடப்படுகிறது. பிற மாநில மக்களை அழைத்து சிறப்பான முன்னெடுப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் இந்த உணர்வு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டிடத்தில் நுழையும் வேளையிலேயே கூட பளிச்சிட்டது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் புனிதமான செங்கோல் நிறுவப்பட்டது. புனித மிகு ஆதினங்களின் வழிகாட்டுதலின் பேரில் இந்த செங்கோல்தான் 1947 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் அடையாளமகாக அமைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications