விவசாய கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதார விலை.. தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட சமாஜ்வாதி!
லக்னோ: வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் அனைத்து விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என சமாஜ்வாதி கட்சி தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
உ.பி. மாநில சட்டசபைத் தேர்தல் வரும் 10 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக தொடங்குகிறது. 403 தொகுதிகளுக்காக நடைபெறும் சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் பாஜக ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி வருகிறது. அது போல் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தனித்தனியே போராடி வருகின்றன.

அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒவ்வொரு கட்சியும் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் சமாஜ்வாதி கட்சி சார்பில் தேர்தல் வாக்குறுதி வெளியிடப்பட்டது. அதில் நேர்மையின் வார்த்தை, மீறப்படாத வாக்குறுதி என பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டோம். அதன் பிறகு உ.பி. யில் ஆட்சியை பிடித்தோம். இது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அது தொடர்பான துறைகளுடன் ஆலோசனை நடத்தினோம்.
அது போல் தற்போதும் வாக்குறுதிகளை அளிக்கிறோம். வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் அதாவது சமாஜ்வாதி கட்சி பதவியேற்கும் 4 ஆண்டுகளில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிறைவேற்றப்படும்.
இலவச பாசனம், வட்டியில்லா கடன், ஓய்வூதிய திட்டங்கள், காப்பீடு உள்ளிட்டவை விவசாயிகளுக்கு கிடைக்கும். காவல் துறை உள்பட அரசு பணிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படும். ஆரம்ப கல்வி முதல் கல்லூரி வரை பெண்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும். 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். ஏழைகள் பசியாற ரூ 10 க்கு உணவு அளிக்கும் திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார். 88 பக்கங்களை கொண்ட தேர்தல் அறிக்கையில் மேலும் பல நலத்திட்டங்களும் இருப்பதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications