உபி-இல் குழந்தைகளிடம் வேகமாக பரவும் கொடிய Scrub Typhus தொற்று.. அறிகுறிகள் என்ன.. வேக்சின் உண்டா?
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் மர்மக் காய்ச்சலால் 40 குழந்தைகள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், அங்குப் பரவுவது ஸ்க்ரப் டைபஸ் என்ற கொடிய நோய் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பை இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. சில மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
மேலும், அடுத்து ஏற்படும் மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு அதிகமாக கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

உபி மர்ம காய்ச்சல்
இந்தச் சூழலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் புதிதாகப் பரவும் மர்ம காய்ச்சல் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் குழந்தைகளிடமே இந்த மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. அங்குள்ள ஃபிரோசாபாத் மாவட்டத்தில் இந்த மர்ம காய்ச்சலால், கடந்த சில நாட்களுக்கு முன் ஒரே நாளில் 12 குழந்தைகள் பலியாகியுள்ளனர். இதுவரை உபி-இல் இந்த மர்ம காய்ச்சலால் குறைந்தது 40 குழந்தைகள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

பலருக்கு பாதிப்பு
இது குறித்து மதுரா தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ரச்சனா குப்தா கூறுகையில், "இங்குள்ள கோ (koh)கிராமத்தில் 26 குழந்தைகள் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், மற்ற பகுதிகளிலும் இந்த பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது. இங்கு மட்டும் 8 குழந்தைகள் உட்பட 10 பேர் இந்த மர்ம காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்" என்றார். உத்தரப் பிரதேசத்தின் மேற்கு மாவட்டங்களான ஆக்ரா, ஃபிரோசாபாத், மெயின்புரி, ஆகிய இடங்களிலும் மர்ம காய்ச்சலும் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

scrub typhus என்ற கொடிய நோய்
இப்பகுதிகளில் இருந்து மாதிரிகளை மருத்துவக் குழுக்கள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். இப்பகுதியில் scrub typhus - ஸ்க்ரப் டைபஸ் என்ற நோய் பரவியுள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். Orientia Tsutsugamushi - ஓரியண்டியா சுட்சுகாமுஷி என்ற பாக்டீரியாவால் இந்த நோய்த் தொற்று ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட சிகர்ஸ் (லார்வா பூச்சிகள்) மனிதர்களை கடிக்கும் போது, இந்தத் தொற்று மனிதர்களுக்கும் ஏற்படுகிறது.

அறிகுறிகள் என்ன
பொதுவாகப் பூச்சிகள் கடித்த பத்து நாட்களுக்குள் அறிகுறிகள் தெரியத் தொடங்கும். காய்ச்சல், சளி, தலைவலி, உடல் மற்றும் தசை வலிகள், மனநிலை மாற்றம், விரிவடைந்த நிணநீர் கணுக்கள் மற்றும் தடிப்புகள் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

தடுப்பூசி இல்லை
ஸ்க்ரப் டைபஸைத் தடுக்க இதுவரை தடுப்பூசி எதுவும் கண்டறியப்படவில்லை. மேலும் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்ட நபருடன் யாரும் தொடர்பில் இருக்கக் கூடாது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். செடி, கொடிகள் அதிகம் இருக்கும் பகுதியில் இந்த பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இதுபோன்ற பகுதிகளில் வசிப்போர் கை மற்றும் கால்களை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாகக் குழந்தைகள் இருந்தால் கொசு வலைகளை பய்படுத்துமாறும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications