ஞாயிற்றுகிழமை லாக்டவுன், மாஸ்க் இல்லைன்னா ரூ.1000 அபராதம்...உ.பி.,யில் அமல்
லக்னோ : உத்திர பிரதேச மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா பரவல் தீரவிமடைந்து வருகிறது. முதல்வர் யோகியாதித்ய நாத், முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் என அடுத்தடுத்து பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.
நேற்றைய நிலவரப்படி உத்திர பிரதேசத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,510 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை மொத்தமாக 1.11 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஞாயிற்றுகிழமையில் லாக்டவுன்
இதனால் மாநிலம் முழுவதும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த உத்திர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன் மாஸ்க் அணியாமல் வரும் ஒவ்வொருவரிடமும் ரூ.1000 அபராதம் வசூல் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.

10 மடங்கு அபராதம்
முதல் தடவை மாஸ்க் அணியாமல் வந்தால் ரூ.1000 அபராதமும், இரண்டாவது முறை அதே தவறை செய்தால் அபராத தொகை ரூ.10,000 ஆக்கப்படும் எனவும் உத்திர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. 10 மாவட்டங்களில் மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடுமையான கட்டுப்பாடுகள்
லாக்டவுன் அமல்படுத்தப்பட உள்ள ஞாயிற்றுகிழமைகளில் பொது இடங்களை தூய்மைப்படுத்தி, கிருமிநாசினி தெளிக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே ஞாயிற்றுகிழமைகளில் அனுமதி வழங்கப்பட உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் கடைகள் தவிர மற்ற கடைகள், அலுவலகங்களை ஞாயிற்றுக்கிழமையில் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா மையங்களாகும் மருத்துவமனைகள்
புதிய கொரோனா சிகிச்சை மையங்கள் அந்தந்த மண்டலங்களின் தேவைக்காக பயன்படுத்தப்பட உள்ளது. உள்ளூர் மருத்துவமனைகள் பலவும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. பிரயாக்ராஜ் மருத்துவ கல்லூரியும் கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. பாதிக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் கொரோனா நோயாளிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரயில்நிலையம், விமான நிலையம் என அனைத்திலும் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க முதல்வர் யோகியாதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications